மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.. 'டெல்லி சலோ' 2 நாட்கள் நிறுத்தி வைத்த விவசாயிகள்
டெல்லி: மத்திய அரசு - விவசாயிகள் இடையே 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு முன்வைத்த திட்டம் குறித்து ஆய்வு செய்து இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி நோக்கி செல்லும் பேரணியைத் தொடங்கினர்.

விவசாயிகள் போராட்டம்: இப்பேரணி பஞ்சாப் - ஹரியானா, ஹரியானா - டெல்லி எல்லைகளைக் கடந்து டெல்லியை அடைய வேண்டும் என்ற திட்டத்துடன் போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியை தடுக்கும் விதமாக இணையதள சேவை, மொத்தமாக எஸ் எம் எஸ் அனுப்ப தடை போன்றவை விதிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது ஹரியானா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் காயம் அடைந்தனர். இதனால் பஞ்சாப்- ஹரியானா எல்லையிலேயே சுமார் ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை: அதன்படி இந்த விவசாயிகளுடன் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விவசாயிகள் - மத்திய அரசு இடையே நேற்று 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. சண்டிகரில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்றனர்.
இதைப்போல பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் இந்த பேச்சுவார்த்தையில் இணைந்தார். வேளாண் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்தையில், குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் மத்திய அரசு சில யோசனைகளை முன்வைத்தது. அதாவது, விவசாயிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திய பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், மக்கா சோளம் உள்ளிட்டவற்றை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு அமைப்புகள் வாங்குவது என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முன்வைத்த இந்த திட்டங்களை ஆய்வு செய்து இரண்டு நாட்களில் தங்கள் முடிவை அறிவிப்போம் என விவசாய சங்க தலைவர்கள் கூறினர். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- விவசாயிகள் கூட்டமைப்புடன் நாங்கள் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்துவோம். அதன்பிறகு முடிவுகளை எடுப்போம். கடன் தள்ளுபடி மற்றும் பிற கோரிக்கைகள் ஆகியவை நிலுவையில் உள்ளது.
கோரிக்கையை ஏற்காவிட்டால்: இந்த கோரிக்கைகளும் அடுத்த இரண்டு நாட்களில் நிறைவேறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை நிறுத்தி வைக்க உள்ளதாகவும் கோரிக்கைகளை 21 ஆம் தேதிக்குள் ஏற்காவிடில் மீண்டும் டெல்லி செல்லும் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications