நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேளுங்கள்.. இந்தியாவுக்கு குவைத் அரசு கண்டனம்
டெல்லி: பாஜக தலைவர்கள், நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்தை பேசியதாக இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பிய நிலையில் குவைத், ஈரான் ஆகிய நாடுகளும் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குவைத் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

டெல்லி பாஜக
இந்த நிலையில் டெல்லி பாஜக ஊடக பொறுப்பாளர் நவீன் ஜிந்தால் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். ஜிந்தாலையும் சமூகவலைதளவாசிகள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து நுபுர் சர்மாவுக்கு எதிராக மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மகாராஷ்டிரா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நுபுர் சர்மா
இதையடுத்து நுபுர் சர்மாவையும் நவீன் ஜிந்தாலையும் பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக இந்தியா தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கத்தார் இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு சம்மன் அனுப்பியது.

தீபக் மித்தல்
அப்போது கத்தார் அரசு, தீபக் மித்தலிடம் கூறுகையில் இத்தகைய இஸ்லாமிய சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் கருத்துகளை கூறுவோருக்கு தண்டனை ஏதும் வழங்காதது மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது வன்முறை மற்றும் வெறுப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.

கத்தார், ஈரான், குவைத் கண்டனம்
கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான் ஆகிய நாடுகளும் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. "வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்" என குவைத் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது போல் ஈரானும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. கத்தார் பிரதமர் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜீஸ் அல் தானியை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்திருந்த நிலையில் கத்தார் இத்தகைய கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications