ஆப்பிரிக்கர்களுடன் தென்னிந்தியர்கள் ஒப்பீடு! சாம் பிட்ரோடாவை ஜெயிலில் அடைங்க மோடி! கோபமான சு.சாமி
டெல்லி: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளனர் எனக்கூறிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா இந்தியாவில் இருந்தால் பிடித்து திகார் சிறையில் அடைக்க பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். அமெரிக்க குடியுரிமை பெற்று சாம் பிட்ரோடா தான் ராகுல் காந்தியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பான திட்டங்களை வகுத்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில் தான் சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பும். அந்த வகையில் தனியார் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
அந்த பேட்டியில் சாம் பிட்ரோடா, ‛‛இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதற்கு சிறந்து உதாரணமாக உள்ளது. இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போல் உள்ளனர். மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போல் இருக்கின்றனர்.
வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போல் இருக்கின்றனர். தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கின்றனர். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள'' என்று தெரிவித்து இருந்தார். அதாவது இந்தியாவில் வசிக்கும் மக்களின் தோல் நிறத்தையும், உருவ அமைப்பையும் மனதில் வைத்து சாம் பிட்ரோடா இப்படி தெரிவித்தார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து என்பது இனவெறி அடிப்படையில் அமைந்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி சாம் பிட்ரோடாவின் கருத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று நடந்த பிரசாரத்தில் கூறி விமர்சனம் செய்தார். தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக சாம் பிட்ரோடா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை உடனடியாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்தால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதன்பிறகு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நேஷனல் ஹேரால்டு வழக்கில் சாம் பிட்ரோடா ஜாமீனில் இருக்கிறார். அதன்பிறகு அவர் சிகாகோவில் தலைமைறைவாக உள்ளார். ஆனாலும் சாம் பிட்ரோடா இந்தியாவில் இருக்கிறாரா? என தேட அமித்ஷாவுக்கு, மோடி உத்தரவிட வேண்டும். மேலும் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதன்பிறகு அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும். ஏனென்றால் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications