சொந்த காசில் சூனியம்.. டிரம்பின் வரி அமெரிக்காவுக்குதான் ஆபத்து! எச்சரிக்கும் ரகுராம் ராஜன்
டெல்லி: அமெரிக்காவின் வரி உலகத்தையே அச்சுறுத்தியுள்ளது. இந்தியா மீதும் டிரம்ப் வரியை போட்டிருக்கிறார். இருப்பினும் இதிலிருந்து தப்பிக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.
டிரம்ப்பின் வரி அமெரிக்காவுக்குதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.

கடந்த புதன் கிழமை பிடிஐ செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில் இந்த விஷயம் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, "டிரம்பின் வரி அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை போல இந்த விவகாரம் மாறும். இந்த புதிய வரி காரணமாக அமெரிக்காவில் விலைவாசி அதிகரிக்கும். எனவே மக்கள் செலவை கட்டுப்படுத்துவார்கள். பொருட்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். இது இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்.
வரியை பொறுத்தவரை எல்லோருக்கும் அது விதிக்கப்பட்டிருக்கிறது என்பதால், இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். எனவே இந்தியாவுக்கு மட்டும் தனிப்பட்ட அழுத்தம் ஏதும் இருக்காது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே வரியை விதிக்கிறோம் என அமெரிக்கா காரணம் சொல்கிறது. ஆனால் அதையெல்லாம் செய்ய அந்நாட்டுக்கு நீண்ட காலம் பிடிக்கும். மறுபுறம் வரி இந்தியாவுக்கு சில நல்ல விஷயங்களை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு சில பொருட்களின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அதாவது அமெரிக்காவில் வர்த்தகம் குறைகிறது எனில் இந்தியாவில் ஏற்றுமதி சரியும். பொருட்கள் தேங்கும். எனவே உள்ளூர் மார்கெட்டில் பொருட்களின் விலை குறையும். இதனை ஆங்கிலத்தில் disinflationary effect என்று கூறுவார்கள். துணி, செருப்பு போன்றவற்றை அதிக அளவில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. மட்டுமல்லாது ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களையும் நாம் ஏற்றுமதி செய்கிறோம். தவிர ப்ளுடூத் இயர்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சிறிய எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
மட்டுமல்லாது இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் நாம் அனுப்புகிறோம். வரி காரணமாக இவை தேக்கமடையும். தேக்கமடைந்தால் விலையும் சரியும். குறைந்த விலையில் சில தரமான பொருட்கள் கிடைக்க நமக்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு பெயர்தான் 'disinflationary effect'.
இன்னொரு பிளஸ் பாயின்ட் என்னவெனில், சீனாவுக்கும் வரி அதிகம். எனவே சீனா அமெரிக்காவை கைவிட்டுவிட்டு நம்மை நோக்கி திரும்பும். சீன பொருட்களின் வரத்து அதிகரிக்க தொடங்கும். இது புதிய டெக்னாலஜியின் வருகையாக இருக்கும் என்று ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.
அதேபோல இந்த வாய்ப்பை இந்தியா எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
1. இந்தியா தன்னுடைய சொந்த வரிகளை குறைக்க வேண்டும்
2. அமெரிக்காவை நம்பியிருக்காமல் ஆசியாவிற்குள் வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும்
3. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் வலுவான உறவை ஏற்படுத்துவது
4. சார்க் நாடுகளுடன் உறவை மேம்படுத்துவது
5. சீனாவுடன் சமமான மற்றும் நீடித்த வர்த்தக உறவை உருவாக்குவது
இதையெல்லாம் செய்தால் இந்தியாவால் அமெரிக்காவின் வரி பாதிப்பிலிருந்து தப்பித்துவிட முடியும். மிக முக்கியமாக உலகம் பிராந்திய அடிப்படையிலான வர்த்தகக் கூட்டமைப்புகளாக பிரிகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தெற்காசியா தனிமைப்பட்டு இருப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியா முந்தி செயல்பட்டு தனது வர்த்தக கொள்கைகளை மாற்றி வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராஜன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications