ரபேல்: அனல் பறந்த வாத, விவாதம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்டார்
டெல்லி: ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறியதாக தவறான கருத்துக்களை சொல்லி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த ராகுல் காந்தியை உச்சநீதிமன்றம் இன்று கடுமையாக கண்டித்தது. இதையடுத்து தனது பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் இடம் பெற்றதற்காக ராகுல் காந்தி தரப்பில் அவரது வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார்.
ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடியை உச்ச நீதிமன்றம், திருடர் என்று பொருள்படும் வகையில் விமர்சனம் செய்ததாக கூறி பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வந்தார்.
நீதிமன்றம் அதுபோன்ற எந்த ஒரு வார்த்தையையும் கூறாத நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டு பேசுவது உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்றுகூறி, பாஜக எம்பி, மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்தார்.
ரபேல் வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.. 4 நாட்களில் பதில் அளிக்க உத்தரவு!
ராகுல் காந்தி வார்த்தைகள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லேகி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதிடுகையில், உச்சநீதிமன்றத்தின் நாவில் ராகுல் காந்தி தனது வார்த்தைகளை புகுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்.. நிபந்தனையற்ற மன்னிப்பு எதையும் இதுவரை ராகுல்காந்தி கூறவே இல்லை என்று வாதிட்டார்.
உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ராகுல் காந்தி குற்றம் சாட்டுவது போன்ற வார்த்தையை, உச்சநீதிமன்றம் எப்போது பயன்படுத்தியது? உச்ச நீதிமன்றத்தை ராகுல்காந்தி நிர்ப்பந்திக்கிறார்.." என்று விமர்சனத்தை முன்வைத்தனர். இதையடுத்து ராகுல் காந்தி தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், "ராகுல் காந்தி முழுமையான வருத்தத்தை தெரிவித்து விட்டார்" என்று விளக்கம் அளித்தார்.
ஆனால், இதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அவர் எப்போது முழுமையாக வருத்தம் தெரிவித்தார் என்று பதில் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். எங்களுக்கு அந்த ஆதாரத்தை காட்ட முடியுமா என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி முரண்
முகுல் ரோகத்கி மீண்டும், வாதிடுகையில், "ராகுல் காந்தி தன்னை ஒரு கல்வி கற்ற நபராக காட்டிக் கொள்கிறார். ஆனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள, பிரமாண பத்திரத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தான் முழுமையாக படித்துப் பார்த்து ஆலோசித்த பிறகு சர்ச்சைக்குரிய கருத்தை கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது ஏற்புடையதாக இல்லை. இந்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். 3 மணி நேரம் கழித்து நடைபெற்ற மற்றொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட, அதே சர்ச்சைக்குரிய வார்த்தையை ராகுல்காந்தி பயன்படுத்தி உள்ளார். எனவே இது எப்படி வருத்தம் தெரிவிப்பதாக ஆகும்? ராகுல் காந்தி கூறிய வருத்தம் என்பது முற்றிலுமாக கண்துடைப்பு மட்டுமே, என்று வாதிட்டார்.
மாற்றி மாற்றி பேசுகிறார்
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "ராகுல் காந்தி தனது பிரமாணப்பத்திரத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். ஒரு இடத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தையை கூறியது உண்மைதான் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, பிரமாணப்பத்திரத்தின், மற்றொரு இடத்தில், தான் அப்படி கூறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் வாதங்களை துவங்கினால், இன்னொரு நல்ல பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தில் நாங்கள் உங்களுக்கு கொடுக்கப் போவதில்லை. நீங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். தவறு என்பது எல்லோரும் செய்யக் கூடியதுதான்" இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மன்னிப்பு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களை கேட்ட அபிஷேக் சிங்வி மீண்டும், வாதிடும்போது, வருத்தம் என்றால் மன்னிப்பு என்றுதான் நான் பார்த்த டிக்ஷனரியில் இருந்தது. இருப்பினும், பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்ற தவறுகளுக்காக, உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். "என் தரப்பில் மூன்று தவறுகள் உள்ளன. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார். மேலும், தவறுகளை திருத்தி, மற்றொரு பிரமாண பத்திரத்தை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்வதாக அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதையடுத்து திங்கள் கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.