ரபேல்.. அனில் அம்பானி நிறுவனத்திற்கு பிரதமர் ஆதரவு.. லோக்சபாவில் அனல் பறந்த ராகுல் காந்தி பேச்சு!
Recommended Video

டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லோக்சபாவில், நேற்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
ராகுல் காந்தி பேசியதாவது: அதிமுக நண்பர்கள், பிரதமரை பாதுகாக்க அவைக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரபேல் விவகாரம் தொடர்பாக நான் பேசும்போது, பாஜகவிற்கு அதிமுக எம்பிக்கள் சேவையாற்றி வருகிறார்கள் (மேகதாது விவகாரத்திற்காக அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டதை குறிப்பிட்டு).
எதிர்க்கட்சி தலைவராக, அரசுக்கு கேள்வி எழுப்ப வேண்டியது எனது கடமை. பிரதமர் மீடியா ஒன்றுக்கு, கொடுத்த ஒன்றரை மணி நேர நேர்காணலை நான் நேற்று பார்த்தேன். ரபேல் தொடர்பாக என்னை யாரும் குற்றம்சாட்டவில்லை என்று மோடி அதில் கூறியுள்ளார். ஆனால், அது பொய். மொத்த நாடும், பிரதமரை நேரடியாக கைகாட்டுகிறது.

3 முக்கிய விஷயம்
ஒன்றரை மணி நேரமாக, நாடகத்தனமாக நடந்த ஒரு நேர்காணலில், ரபேல் தொடர்பான அடிப்படை விஷயங்களுக்கு கூட பிரதமர் பதில் அளிக்கவில்லை என்று இந்த நாடே கேட்கிறது. ரபேல் விவகாரம் 3 தூண்களை கொண்டது. முதல் தூண், நடைமுறை, 2வது விலை நிர்ணயம், 3வது மற்றும் சுவாரசியமானது, ஆதரவு/சப்போர்ட்.

விமானங்கள்
8 வருட கால தீவிர பணிக்கு பிறகு விமானப்படை ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இறுதி செய்தது. 126 போர் விமானங்கள் தேவை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இது 36 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளது. யார் இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது? விமானப்படை மத்திய அரசிடம், இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்ததா? 126 விமானங்கள் வேண்டாம், 36 விமானங்கள் போதும் என்று விமானப்படை கூறியதா? 36 விமானங்களாக குறைக்கப்பட்டதற்காகு, மத்திய அரசு கூறிய பதில், எங்களுக்கு விரைவாக விமானங்கள் வேண்டும் என்பதுதான். ஆனால் அவ்வளவு அவசரம் என்றால் ஏன் இதுவரை ஒரு விமானம் கூட இந்திய மண்ணுக்கு வரவில்லை.

பாதுகாப்பு அமைச்சர்
இந்த ஒப்பந்தத்தின் மொத்த நடைமுறையும், பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரிடம், ஒப்பந்தம் மாற்றப்பட்டது குறித்து கேட்டபோது, எனக்கு அதுகுறித்து ஐடியாவே இல்லை என்றார். பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை கமிட்டியும், ரபேல் ஒப்பந்த மாறுபாடுக்கு ஒப்புதல் தரவில்லை. ஆனால் பிரதமர் இதுகுறித்து எந்த கருத்தும் கூறவில்லை. நீங்கள் பழைய ஒப்பந்தத்தை மாற்றி 36 விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்தீர்கள். விமானப்படை இந்த முடிவை எடுத்ததா? பிரதமர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்தாரா? இது எனது முதல் கேள்வி.

பிரான்ஸ் அதிபர்
இரண்டாவது விஷயம், ரபேல் விமானத்தின் விலை தொடர்பானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரபேல் போர் விமானங்கள் தலா 526 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மோடி பிரான்ஸ் சென்று, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலந்த்தை சந்தித்தபோது, புது ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். 1600 கோடி ரூபாயாக அப்போது விமானத்தின் விலை மாற்றியமைக்கப்பட்டது. 526 கோடியிலிருந்து ஏன் 1600 கோடியாக உயர்த்தப்பட்டது? இந்திய பிரதமர்தான் என்னிடம், புதிய விலைதான் செல்லுபடியாகும் என்றும், ஒப்பந்தம் ஹெச்ஏஎல் அமைப்பிடமிருந்து, அம்பானி நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் என்று, முன்னாள், பிரான்ஸ் அதிபர் பொது வெளியில் கூறியுள்ளார்.
1600 கோடி ரூபாயாக விமான விலை உயர்த்தப்பட்டதற்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனரா இல்லையா என்பது அடுத்த கேள்வி.

அம்பானி நிறுவனம்
இறுதியாக, சப்போர்ட் தொடர்பான கேள்விக்கு வருகிறேன். ஹெச்ஏஎல் விமானங்களை தயாரிக்கும் அரசு நிறுவனம். 70 வருடங்களாக ஹெச்ஏஎல் விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 1965ம் ஆண்டு போரில், நாம் வெற்றி பெற நேட் விமானங்கள் முக்கிய காரணம். எஸ்யூ 30, மிராஜ், மிக் 27 விமானங்கள் ஹெச்ஏஎல் அமைப்பால் உருவாக்கப்பட்டவை. ஹெச்ஏஎல்லுக்கு நல்ல சாதனை ரெக்கார்ட் உள்ளது. பல ஆயிரம் பேருக்கு ஹெச்ஏஎல் வேலைவாய்ப்பு தருகிறது. மற்றொரு பக்கம், அனில் அம்பானி, தோல்வியடைந்த தொழிலதிபர். 45000 கோடி ரூபாய் கடன் உள்ளவர். அனில் அம்பானி, 10 நாட்களுக்கு முன்பாக கம்பெனி தொடங்கி, ரபேல் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

ஹெச்ஏஎலுக்கு ஏன் தரப்படவில்லை
இந்திய பிரதமர்தான் அனில் அம்பானிக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க கூறியதாக பிரான்ஸ் அதிபர் கூறினார். டஸ்சால்ட் நிறுவனம் கொடுத்த பணத்தை வைத்துதான், அனில் அம்பானி நிலமே வாங்கியுள்ளார். பிரதமர் எதற்காக தனது நண்பர் அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தை அளித்தார். இதனால் இந்திய கருவூலத்திற்கு ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எதற்காக ஹெச்ஏஎல் அமைப்பிடமிருந்து ஒப்பந்தம் பறித்துச் செல்லப்பட்டது.

பிரதமர் ஒளிந்து கொண்டார்
பாதுகாப்பு அமைச்சரோ, அவையில், அதிமுக எம்பிக்கள் பின்னால் அமர்ந்து சிரித்துக்கொண்டுள்ளார். ஆனந்த் ஷர்மா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரான்ஸ் அதிபரை சந்தித்தபோது ரபேல் விமான விலையை வெளியே சொல்ல கூடாது என்று ஒப்பந்தத்தில் ஷரத்து இல்லை என்று கூறியிருந்தார். ரபேல் விவகாரத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன. கடந்த முறை லோக்சபாவில் ரபேல் தொடர்பாக நான் பேசியபோது, ஒன்றரை மணி நேரம் பிரதமர் பதில் சொன்னார். ஆனால் 5 நிமிடம் கூட பிரதமர் ரபேல் குறித்து பேசவில்லை. இப்போது பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை. பாதுகாப்பு அமைச்சர் அதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி தனது அறைக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.

ஆடியோ விவகாரம்
நான் இப்போது ஒரு ஆடியோவை இங்கே ஒலிபரப்ப சபாநாயகர் அனுமதியை கோருகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியதும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்து, கடந்த முறை ரபேல் தொடர்பாக ராகுல் காந்தி பேசியபோது, நாட்டுக்கு பொய் தகவலை அளித்தார். அதை, பிரான்ஸ் அரசும் அம்பலப்படுத்திவிட்டது. இப்போது, ராகுல் காந்தி, ஒரு ஆடியோவை வெளியிடுவதாக கூறுகிறார். பொய் தகவல் அவையில் பதிவாகக்கூடாது. அவரே முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டால், இதை ஒலிபரப்பலாம். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார். இதையடுத்து சாபாநாயகர், சுமித்ரா மகாஜன், ராகுல் காந்தியை பார்த்து, நீங்கள் ஆடியோவை ஒலிபரப்பினால், அதற்கான உண்மைத்தன்மைக்கு பொறுப்பேற்க வேண்டும். அல்லது, ஆடியோவை ஒலிபரப்ப முடியாது, என்று தெரிவித்தார்.

உண்மைத்தன்மை
இதையடுத்து ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்தார். ஆடியோ ஒலிபரப்ப அவர்கள் பயந்தால், நான் அதை வாசித்துக் காட்டுகிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், உண்மைத் தன்மைக்கு பொறுப்பேற்றால் மட்டுமே நீங்கள் ஆடியோ விவகாரத்தை பேச முடியும் என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications