அன்று காலி செய்ய வைக்கப்பட்ட.. அதே வீட்டுக்கு திரும்பி வரும் ராகுல் காந்தி.. திரும்ப ஒப்படைத்த அரசு
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதால் வயநாடு தொகுதி எம்பியாக மீண்டும் தொடர்ந்துள்ளார். இதையடுத்து மீண்டும் மத்திய அரசு சார்பில் டெல்லியில் ராகுல் காந்திக்கு துக்ளக் லேனில் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையின் வீடு ஒதுக்கீடு செய்யும் குழு, துக்ளக் லேனில் ராகுல் வசித்து வந்த பழைய பங்களாவையே அவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க" என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தீர்ப்பை அவர் அறிவித்தார். நீதிபதி கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராகுல் காந்தி ஏப்ரல் 4ம் தேதி அன்று தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் எம்பியாக உள்ள ராகுல்காந்தி 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால் 2019 இல் நடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் தோற்றார். அதேநேரம் கேரளாவின் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உறுப்பினராக வெற்றி பெற்றார். டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த வீடு கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்ய வைக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடருவதால், அவர் இதுவரை வசித்து வந்த பழைய வீட்டையே மத்திய அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications