2 ஆண்டுகள் சிறை தண்டனை.. ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்படுமா? எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!
டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரின் எம்பி பதவி பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ள சூழலில், டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் எம்பி-க்கள் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார். நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

அவதூறு வழக்கு
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏ-வுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கு சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதன் பின்னர் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் மேல்முறையீடு
அதேபோல் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். அதேபோல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அபாயம்
இருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூரத் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மக்களவை செயலகம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து அவரது வயநாடு தொகுதியை காலியாக அறிவிக்க முடியும்.

ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு?
இதையடுத்து அந்த இடத்திற்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். உயர் நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்படாவிட்டால் இந்த சூழ்நிலை நடைமுறைக்கு வரும். அப்போது எம்பி பதவி மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது. உயர் நீதிமன்றம் ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த நடைமுறைகள் எல்லாம் 3 மாதத்திற்குள் முடிக்காவிட்டால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். அதன்பின்னர் கண்டனம் தெரிவித்து பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவரிடம் முறையிடவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications