மூன்றரை மணி நேரம் விசாரணை முடிந்த கையோடு.. மருத்துவமனை விரைந்த ராகுல்! சோனியாவிடம் நலம் விசாரித்தார்
டெல்லி: அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு நடுவே, கொரோனா தொற்று பாதிப்புக்காக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது மகன் ராகுல் காந்தி இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் என்பது பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். முன்னதாக டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் பேரணியாக அமலாக்கப் பிரிவு அலுவலகம் நோக்கி சென்றனர். ராகுல் காந்தியை தவிர அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் ராகுல் காந்தியிடம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியிடம் துருவி துருவி அதிகாரிகள் கேள்விகளைக் கேட்டனர். இதன்பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு ராகுல் காந்தி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் தாயார் சோனியா காந்தியை ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மீண்டும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இலங்கை: ராகுல், திருச்சி சிவாவை கொண்ட நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் தரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்