“56 இன்ச் மார்பு.. ஆனால் டிரம்ப் போன் போட்டதும் பயந்து போனார் மோடி” - ராகுல் காந்தி அட்டாக்!
பாட்னா: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, 56 அங்குல மார்பு இருப்பதாகச் சொல்லும் மோடி, டொனால்டு டிரம்ப் இந்த 'சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்துமாறு கூறியதும் பயந்து போனார் என விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் கட்டுப்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியின் வேட்பாளரும் காங்கிரஸ் தலைவருமான அமிதா பூஷனை ஆதரித்து பெகுசராய் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார். 1971 போரின்போது அமெரிக்கக் கடற்படையின் அச்சுறுத்தலுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அஞ்சவில்லை என்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தி பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் இருந்து பிரதமர் மோடிக்கு தொலைபேசி வந்தது. 56 அங்குல மார்பு இருப்பதாகச் சொல்லும் மோடி, டொனால்டு டிரம்ப் இந்த 'சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்துமாறு கூறியதும் பயந்து போனார். இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மோடி அதை நிறுத்தினார். உண்மை என்னவென்றால், நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல, அதானி- அம்பானி போன்றவர்களுக்கும் கட்டுப்பட்டு பயப்படுகிறார்.
"பிரதமர் மோடிக்கு 56 அங்குல மார்பு இருக்கலாம், ஆனால் ஒருவரின் தைரியம் மார்பின் அளவைப் பொறுத்தது அல்ல என்பதே உண்மை. காந்திஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார், அவருக்குப் பெரிய மார்பு இல்லை, ஆனால் அவர் பயப்படவில்லை. அகன்ற மார்பு இல்லாமலே கோழையாக இல்லாத பலர் உள்ளனர், ஆனால் 56 அங்குல மார்புடன் கோழைகளாக இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்" என்று லடுமையாக விமர்சித்தார்.
பீகாரில் தொழில்களைத் தொடங்குவதற்கு நிலம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். "சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா, பீகாரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க நிலம் இல்லை என்று கூறினார். நிலம் இல்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் நிலத்தைத் திருடி அதானிக்கு ஒரு ரூபாய்க்கு கொடுக்க உங்களுக்கு எப்படி நிலம் இருக்கிறது என்று நான் கேட்க விரும்புகிறேன். அதற்கு நிலம் இருக்கிறது, ஆனால் பீகாரின் வளர்ச்சிக்கு நிலம் இல்லை" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications