காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.. நிர்வாகிகளுக்கு உருக்கமான வேண்டுகோள்
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். புதிய தலைவரை காலதாமதமின்றி தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உருக்கமாக வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறை பாஜகவிடம் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அண்மையில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கூட மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் வலுவான கூட்டணி அமைத்த போதும் அங்கும் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது,
இதேபோல் உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி, இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியையும், வாக்கு வங்கி ரீதியாக கடும் சரிவையும் சந்தித்துள்ளது.
இதில் மிக சோகமான விஷயம் என்னவென்றால் ராகுல் காந்தியின் பாட்டி, தாத்தா காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தோல்வியே அடையாத அமேதி தொகுதியில் ராகுல் காந்தி , பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் தோற்றது தான். இது ராகுல் காந்தியை நிச்சயம் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்.
எனினும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரசுக்கு காலதாமதமின்றி புதிய தலைவரை தேர்வு செய்யவும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கடசி உடனடியாக எந்த தாமதமும் இன்றி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நான் ஏற்கனவே எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். என்னால் நீண்ட நாள் தலைவராக செயல்பட முடியாது என கூறியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தியின் முடிவினை காங்கிரஸ் தலைமைக்குழு ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.