வெள்ளை சட்டையில் மாஸ் எண்ட்ரி.. ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்தவுடன் அலறிய பாஜக எம்பிகள்-ஒத்திவைப்பு
டெல்லி: 2 ஆண்டுகால சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்து உள்ள நிலையில் அவர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது.

ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாக பேசியதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அமர்வில் கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
டெல்லியில் அவர் பல ஆண்டுகளாக தங்கி இருந்த எம்பிக்களுக்கான அரசு இல்லத்தில் இருந்தும் அவர் காலி செய்ய வைக்கப்பட்டார். நாடு முழுவதும் இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதற்கான காரணங்கள் விளக்கப்படவில்லை என்று தெரிவித்தது.
ராகுலுக்கு ஒரு நாள் சிறை தண்டனை குறைவாக வழங்கி இருந்தால் கூட எம்பி பதவியை அவர் இழந்திருக்க மாட்டார் என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், வயநாடு தொகுதி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதன் காரணமாக மீண்டும் எம்பி பதவி ராகுல் காந்திக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 நாட்களாகியும் எம்பி பதவி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனைக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தது.
இந்த நிலையில் மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்படுவதாக அறிவித்தது. இதனை அடுத்து 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தந்தார். வெள்ளை டீ சர்ட் அணிந்து நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், இன்று வெள்ளை சட்டை அணிந்து மக்களவைக்கு வந்தார்.

ஒருபக்கம் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்த சமயத்தில், பாஜகவினரும் ராகுல் காந்தி உள்ளே வந்தவுடன் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications