கொரோனா- மத்திய அரசு வேண்டுகோளை உதறிய ராகுல்.. ஹரியானாவில் வழக்கம் போல பாதயாத்திரை!
டெல்லி: கொரோனா பரவல் மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில் பாதயாத்திரையில் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோளை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார். ஹரியானாவில் இன்று தமது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.
சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சமாக இருந்து வருகிறது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஜப்பான், தென்கொரியா நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

இதனையடுத்து நமது நாட்டிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் இல்லை எனில் பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில்,சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் உருவாகிவிட்டது. ஆகையால் கொரோனா சோதனைகளை வேகப்படுத்த வேண்டும்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டு. அப்படி செய்ய இயலாது எனில் ஒற்றுமை யாத்திரையை ஒத்த்வைக்கவும் என எழுதப்பட்டிருந்தது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ராகுல் காந்தியின் பாதயாத்திரையை கண்டு பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதையே இது வெளிப்படுத்துகிறது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் சாடி இருந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் வேண்டுகோளை நிராகரித்து ராகுல் காந்தி இன்று தமது பாதயாத்திரையை ஹரியானாவில் வழக்கம் போல மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கால கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை.
ராகுல் காந்தி யாத்திரையை தடுக்க மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையாகி இருக்கின்றன. ராகுல் காந்தி யாத்திரைக்கான ஆதரவை கண்டு பாஜக அஞ்சுகிறது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. ராகுல் காந்தியின் யாத்திரை விரைவில் டெல்லிக்குள் நுழைய உள்ளது. டெல்லியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இணைய உள்ளனர்.
டெல்லி ராகுல் காந்தி யாத்திரையில் தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைய உள்ளார். இதேபோல் காங்கிரஸின் கூட்டணி கட்சித் தலைவர்களும் ராகுலின் யாத்திரையில் இணைய இருக்கின்றனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கான முன்னோட்டமாக இதனை காங்கிரஸ் பார்க்கிறது. இந்த காரணத்தாலேயே பாஜகவும் ராகுல் யாத்திரையை தடுக்க முயற்சிக்கிறது எனவும் கூறப்படுகிறது.
ராகுல் யாத்திரை விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவிக்கையில், பாஜகவினர் மட்டும் ஊர்வலங்கள், யாத்திரைகள் செல்லலாம். ஆனால் ராகுல் காந்தி செல்லக் கூடாதா? இப்போதுதான் மத்திய பாஜக அரசு முழித்துக் கொண்டிருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்போது பதில் கிடைக்குமோ என கூறியுள்ளார். இந்த பின்னணியில் ஹரியானாவில் ராகுல் காந்தி ஜெகஜோதியாக வழக்கம் போல யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications