ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பாஜக மீது பாய்ந்த காங்.. பரபர குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தியை கண்டு பாஜக அரசு அச்சப்படுவதே இதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் சரமாரியாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து இருந்தார்.
தனது கேரள பயணத்தை நிறைவு செய்து கன்னூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி நேற்று இரவு வாரணாசிக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். இன்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரக்யராஜ் நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தியின் பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

தரையிறங்க அனுமதி மறுப்பு
அந்த வகையில், ராகுல் காந்தியின் தனி விமானம் நேற்று இரவு 10.45 மணியளவில் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தியின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டது. கன்னூரில் இருந்து வந்த ராகுல் காந்தியின் விமானம் டெல்லிக்கு திரும்பியது.

அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக
இந்த நிலையில், ராகுல் காந்தியின் விமானத்தை வேண்டும் என்றே வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் காந்தியின் மீதான அச்சம் காரணமாக பாஜக அழுத்தம் கொடுத்து இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், "ராகுல் காந்தி வாரணாசிக்கு வந்து விட்டு இங்கிருந்து பிரக்யாராஜ் போவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்து விட்டுவிட்டனர்.

பிரதமர் கலக்கம் அடைந்துள்ளார்
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் வருகையை சாக்காக சொல்கிறார்கள். அதிக அளவிலான விமானம் வருகை தருவதால் தரையிறங்க அனுமதி இல்லை என சொல்கிறார்கள். ராகுல் காந்தியை கண்டு பாஜக அச்சப்படுகிறது. அதன் காரணமாகவே ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையை கண்டு பிரதமர் கலக்கம் அடைந்துள்ளார். எனவே தற்போது ராகுல் காந்திக்கு தொல்லை கொடுக்கிறார்கள்" என்றார்.

கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை
முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை வாராணசிக்கு வருகை தந்திருந்தார். வாரணாசியில் உள்ள கோட்வால் பாபா கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் குடியரசுத்தலைவர் சென்றார். குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காசிக்கு வந்த திரவுபதி முர்மு கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். குடியரசுத்தலைவர் வருகை காரணமாக விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications