கோபமான ராகுல்.. இப்படி இருந்தால் பாஜகவை எப்படி வீழ்த்த முடியும்? கட்சி தலைகளை திட்டியதால் பரபரப்பு
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வியடைந்தது. இத்தகைய சூழலில் நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கிய ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களை சாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. குறிப்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸை வீழ்த்தி மீண்டும் பாஜக அரியணை ஏறியது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, செயற்குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது என்பது மிகவும் முக்கியம். அதேவேளையில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது மிகவும் அவசியம். ஆனால் நம் கட்சியில் அட்ஜட்ஸ்மென்ட் செய்யும் நிலை என்பது பலருக்கும் இல்லை. இதனால் தான் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளோம்.
குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 4 முறை தொடர்ந்து பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம். மேலும் பாஜகவை வீழ்த்த பிராந்திய கட்சிகள், சிறு சிறு கட்சிகளின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் நம் கட்சியின் மாநில தலைமை அதனை ஏற்க தயாராக இல்லை. மத்திய பிரதேசத்தில் சிலர் (கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள்)தவறாக செயல்பட்டுள்ளனர். எதேச்சதிகார போக்கால் நாம் பின்னடைவை சந்தித்துள்ளோம்.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் மத்திய பிரதேசத்தில் கூட்டணி வைத்திருக்க வேண்டும். சில தொகுதிகளை அந்த கட்சிக்கு காங்கிரஸஅ கூட்டணியில் ஒதுக்கி இருக்க வேண்டும். மேலும் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து அவர்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். இது நடக்கவில்லை. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் சில இடங்களில் அட்ஜெட்ஸ்ட்மென்ட் என்பது தேவை. மேலும் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு சதவீத ஓட்டுகளும் மிகவும் முக்கியமானது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நாம் பிரசாரங்களை சரியாக கையாளவில்லை. ஆனால் தெலுங்கானாவில் சிறப்பாக செயல்பட்டோம். ஒரு ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் 3வது கட்சியாக தான் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சியை பிடித்துள்ளது. இதுபோல் சிந்தித்து செயல்பட வேண்டும். மேலும் பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல. கடந்த 2018 ம் ஆண்டில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வீழ்த்தி உள்ளோம். அந்த கட்சிக்கு மாநிலங்களில் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால் நம் கட்சியின் கட்டமைப்பை ஏன் வலுப்படுத்த முடியவில்லை'' என சாடியுள்ளார்.
அதோடு, ‛‛மேலும் தற்போதைய தோல்வியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலை திறம்பட எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். '' என அறிவுரை வழங்கி உள்ளார். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் இந்த பேச்சை மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல மூத்த தலைவர்கள் ஆதரித்துள்ளனர். அதோடு கட்சியின் நலனுக்காக சில தொகுதிகளை கூட்டணியில் இருப்போருக்கு வழங்குவதால் தவறு ஒன்றும் இல்லை. அது எந்த வகையிலும் பிரச்சனையாக இருக்காது. மாறாக கட்சிக்கு தான் நன்மையை கொடுக்கும் என மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications