டிரம்பின் 50% வரி விதிப்பு மிரட்டல்.. மோடியின் பலவீனம்.. ராகுல் காந்தி அட்டாக்!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்கா கெடு விதித்திருந்த நிலையில், கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை டிரம்ப் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்கும் நாடாக இந்தியா உள்ளதால் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியால், இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதமானது 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
அதிபர் டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பால் இந்திய வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையை உருவாகியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி வரி விதிப்புக்கு மத்திய வெளியுறவுத்துறையும் நியாமற்றது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "டிரம்பின் 50 சதவிகித வரி விதிப்பு என்பது பொருளாதார ரீதியிலான மிரட்டல். இது இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி. மோடியின் பலவீனம், இந்தியர்களின் நலன்களை விழுங்கி விடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications