விஜய்க்கு “சிக்னல்” கொடுத்த ராகுல் காந்தி.. அந்த வார்த்தைய கவனிச்சீங்களா? 2026ல் கூட்டணிக்கு ரெடியா?
டெல்லி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. ராகுலின் பதிவு விஜய்க்கு அவர் தெரிவித்துள்ள சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வெற்றி பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் பதவியேற்றுக் கொண்டனர். மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் "இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நன்றி விஜய். ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும்போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இதுவே நமது கூட்டு இலக்கும் கடமையும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, விஜய்யின் அரசியல் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. நேரிடையாகவே விஜய் அரசியல் பேசி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பின்னர், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகிய இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் 40க்கு 40 வென்ற திமுக கூட்டணிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. விஜய்யின் பிறந்தநாளுக்கு திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
இதனால், திமுகவுக்கு எதிரான அணியையே விஜய் கட்டமைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணக்கத்தை விரும்புகிறாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ராகுல் கொடுத்துள்ள ரிப்ளை, விஜய்க்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications