24 மணி நேரமும்.. ராகுல் காந்தி என்னையே நினைத்துக்கொண்டிருக்கிறார்.. விளாசிய பிரதமர் மோடி
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி 24 மணி நேரமும் என்னையே நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் காங்கிரஸ் ஒரு கொள்ளைக்கடை. காங்கிரஸ் கடை விரைவில் இழுத்து மூடப்படும் என்று பேசினார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை, பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் உள்ளிட்டவை நாட்டையே உலுக்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

இதனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
இந்த நிலையில், இன்று 4.30 மணியளவில் பிரதமர் மோடி தனது பதிலுரையை பேச ஆரம்பித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:- ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொய் மூட்டைகளின் கடையாகவும் கொள்ளை கூடாரமாகவும் காங்கிரஸ் விளங்குகிறது. காங்கிரஸ் கடை விரைவில் இழுத்து மூடப்படும்.
ராகுல் காந்தி 24 மணி நேரமும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறார். வெறுப்பின் கடை தெருவில் அன்பின் கடை காரர் என்ற பிரசாரத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இது கொள்ளை அடிக்கும் கடை என்று நாட்டு மக்கள் கூறுகிறார்கள். இந்த கடையில் பிரிவினைவாதம் மற்றும் வன்முறைதான் விற்பனையாகிறது.
சீக்கியர்கள் படுகொலை போன்றவை எல்லாம் உங்கள் கடையில் தான் விற்பனை செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கர்வ கூட்டணி நாட்டில் விரைவில் பொருளாதாரம் வீழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கர்வத்தை திசை திருப்பும் பணியை தேசம் செய்யும். இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications