பாஜகவிற்கு அதிமுக சப்போர்ட் என்ற ராகுல் காந்திக்கு, தம்பிதுரையின் பதிலடி இதுதான்!
டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்பக் கூடாது என்பதற்காகத்தான் ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்து பேசினார் என்று தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் லோக்சபாவில் நேற்று ராகுல் காந்தி ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசினார்.
அப்போது, அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் என்னை பேசவிடாமல் கோஷமிடுவதாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு தம்பிதுரை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
அணைக்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ள, மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் நல்ல புரிதல் உள்ளது.
மேகதாது விவகாரத்தை அதிமுக வலியுறுத்தி வருவதால், அதை மறைக்கத்தான் ரஃபேல் விவகாரத்தை திடீரெனக் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. மேகதாது விவகாரத்தை, காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து மறக்கடிக்கப்பார்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications