கொரோனா, 20 வீரர்கள் வீரமரணம்.. என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்.. ராகுல் உருக்கம்
டெல்லி: கொரோனா மற்றும் இந்திய சீனா மோதல் காரணமாக 20 பேர் வீரமரணமடைந்ததால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று ராகுல்காந்தியின் 50 ஆவது பிறந்தநாள் ஆகும். ஆனால் கட்சியினர் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறுகையில் கொரோனாவால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் லடாக் எல்லையில் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர். இதனால் கட்சியினர் யாரும் ராகுலின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.
இந்த கொண்டாட்டத்திற்கு பதில் லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்ய வேண்டும். இந்த கடினமான காலங்களில் ஒரு வேளை உணவுக்கே பலர் கஷ்டப்படுவதால் சமூக சமையலறைகளை ஏற்படுத்த வேண்டும்.
தனது தாய் நாட்டுக்காக எல்லையில் வீரமரணம் அடைந்த 20 பேரின் ஆன்மா சாந்தி அடைய இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துங்கள். கேக் கட் செய்வது , முழக்கமிடுவது, பேனர் வைப்பது ஆகியவற்றை அனைவரும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் ரத்த தான முகாம்களை ஏற்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் பிறந்தநாளையொட்டி 50 லட்சம் உணவு பொட்டலங்களை ஏழைகளுக்கு விநியோகிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதுபோல் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications