உக்ரைனில் தாக்கப்பட்ட இந்திய மாணவர்கள்: ராகுல் காந்தி ஷாக்! இந்திய மக்களை கைவிடக் கூடாது என கோரிக்கை
டெல்லி: உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க கையில் இருக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாடு மீது ரஷ்யா உக்கிரமான யுத்தத்தை நடத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.
உக்ரைனில் வசிக்கும் வெளிநாட்டவரை தாய்நாட்டுக்கு அழைத்து செல்வதில் உலக நாடுகள் தீவிரம் காட்டுகின்றன. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 5 விமானங்களில் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் அடங்குவர்.

இந்தியர்கள் தாயகம்
ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. ரஷ்யாவின் யுத்தத்தைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை மொத்தம் 1,156 இந்தியர்கள் தாய்நாடு திரும்பி இருக்கின்றனர். தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு திட்டம்
இதனைத் தொடர்ந்து உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி இந்தியர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று இரவு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்றும் இந்த செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்தியர்கள் மீது தாக்குதல்
இதனிடையே உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்துக்கு செல்லும் இந்தியர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் குடும்பங்கள் பதற்றமடைந்துள்ளன.

ராகுல் காந்தி கோரிக்கை
இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும், இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் மிகவும் வருந்துகிறேன். எந்த பெற்றோருக்கும் இது போன்ற நிலைமை வரவே கூடாது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு பக்கிரங்கப்படுத்த வேண்டும். சொந்த நாட்டு மக்களை நாம் கைவிட கூடாது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications