ஒரு இஞ்ச் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என மோடி பச்சை பொய் சொல்கிறார்.. ராகுல் சீற்றம்!
டெல்லி: நமது நாட்டின் ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவின் லடாக், பூட்டானின் டோக்லா, வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை சீனா படுகொலை செய்ததால் இரு நாடுகளிடையே யுத்த சூழ்நிலையும் உருவானது. ஆனால் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை 3 ஆண்டுகளாக தொடர்ந்த் நடத்தி வருகிறது.

இப்பின்னணியில், சீனா அதிகாரப்பூர்வமான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1962-ம் ஆண்டு இந்திய நிலத்தை ஆக்கிரமித்து அக்ஷாய் சின் என பெயரிட்ட பகுதி, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவை தம்முடைய நிலம் என சீனா குறிப்பிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா, தெற்கு திபெத் என பெயரிட்டிருக்கிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அண்மையில் லடாக் நான் சென்றிருந்தேன். அப்பகுதி மக்களும் கூட சீனா ஊடுருவியிருப்பதை சுட்டிக்காட்டினர். தற்போது சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் அருணாசலப் பிரதேசத்தை தம்முடையதாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி பகிரங்கமாக பேச வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications