நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து லோக்சபாவில் விவாதிக்கனும்.. மோடிக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக லோக்சபாவில் நாளை விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒருநாள் விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி பதிலுரையாற்றினார்.

முன்னதாக லோக்சபா, ராஜ்யசபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவடைந்த பின்னரே எந்த ஒரு விவாதமும் நடத்த முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும் பிரதமர் மோடியின் பதிலுரையும் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நீட் தேர்வு முற்ரைகேடுகள் தொடர்பாக நாளை லோக்சபாவில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக புதிய எம்பிக்கள் பதவியேற்றது முதலே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது; நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து இந்தியா கூட்டணி எம்பிக்களும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை கைவிட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி இருந்தனர்.












Click it and Unblock the Notifications