மகாராஷ்டிரா தேர்தல்.. வாக்குச்சாவடியின் சிசிடிவியை தாங்க.. தேர்தல் ஆணையத்தை விடாமல் சீண்டும் ராகுல்
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ‛மேட்ச் பிக்சிங்' நடந்துள்ளது. இது அடுத்த பீகார் சட்டசபை தேர்தலிலும் நடக்கும் என்று ராகுல் காந்தி ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் ராகுலின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனை ஏற்காத ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு மேலாக வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையம் இடையே மோதல் வலுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் தான் பாஜக வென்றதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி வைத்துள்ளார்.
அந்த கட்டுரையில், தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழுவை திரட்டுதல், பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல், பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை இலக்காக நிர்ணயித்தல், ஆதாரங்களை மறைத்தல் என்ற ஐந்து படிநிலைகளில் மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும், இது அடுத்து வரவுள்ள பீகார் தேர்தலிலும் இது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் தரும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வொரு தேர்தல் செயல்முறையும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறது, அதுவும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது நாட்டுகே தெரியும்.
தவறான தகவலை கூறுவது சட்டப்படி குற்றம் மட்டுமின்றி, அவர்களின் சொந்த அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அதோடு தேர்தல்களின் போது அயராது மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் பணிநீக்கத்துக்கு வழிவகுக்கும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி அந்த கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. மேலும் இன்னொரு பதிவில் ராகுல் காந்தி,‛‛தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பாக உள்ளது.உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால் எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்கவும்:
மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும். இதனை அப்படியே தவிர்ப்பது உங்களை ஒருபோதும் காக்காது. இதனால் உண்மைையை சொல்லுங்கள்'' என்று கூறியுள்ளார். இதனால் ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையம் இடையே மோதல் வெடித்துள்ளது
***












Click it and Unblock the Notifications