இனி கவலை இல்லை..300 கி.மீ தூரத்திற்குள் ரயில்வே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.. உதவும் கூகுள் மேப்!
டெல்லி: இனி ரயில்வே தேர்வு மையங்கள் கூகுள் மேப் உதவியுடன் 300 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் தேர்வர்களுக்கு ஒதுக்கப்படும் என ரயில்வே உயரதிகாரி கூறியுள்ளார்.
இந்தியாவில் ரயில்வே பணிக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. ரயில்வே பணிக்கான தேர்வுகளை இந்த வாரியம் தான் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் ரயில்வே தேர்வு எழுத விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

சிரமப்படும் தேர்வர்கள்
பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் வேறு மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதால் தேர்வர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதுடன் அவர்களுக்கான பயண நேரம், செலவு அதிகரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் மொழி தெரியாத மாநிலத்துக்கு சென்று தேர்வு மையங்களை கண்டுப்பிடிப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

பிரச்சனைக்கு தீர்வு
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடவடிக்கை எடுக்க துவங்கியது. தேர்வர்களுக்கு 300 கிலோமீட்டர் சுற்றளவில் தேர்வு மையம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூகுள் மேப் பயன்படுத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் நபரின் பின் எண் மூலம் கூகுல்மேப் உதவியுடன் அருகே உள்ள தேர்வு மையங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரி ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார்.

300 கிலோமீட்டர் தேர்வு மையம்
ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பின் நம்பரின் அடிப்படையில் கூகுள் மேப் உதவியுடன் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தேர்வு மையத்தை கண்டறிந்து ஒதுக்கீடு செய்ய உள்ளோம். அதோடு பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகளை தேர்வர்கள் எளிதாக அணுகுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். விண்ணப்பதாரர்களின் தொடர் புகாரில் ஒன்றுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஜூலை 30ல் தேர்வு
மேலும் ஜூலை 30ம் தேதி ரயில்வே நிலை 6 மற்றும் நிலை 4க்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 7,026 பதவிகளுக்கு சுமார் 60,000 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வையொட்டி ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

99 சதவீதம் பேருக்கு
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தற்போதைய நிலவரப்படி 300 கிமீ சுற்றளவில் 99 சதவீதம் பேருக்கு தேர்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அதேநேரத்தில் 400 கிலோமீட்டர் தொலைவுக்குள் அனைத்து பெண் தேர்வர்களுக்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களில், ஒரு சில தேர்வு மையங்கள் மட்டுமே இருப்பதால் 300 கிமீ வரம்புக்குள் தேர்வு மையம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications