தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி!
சென்னை: முதல்வர் விஜய்யை இப்போதைக்கு சந்திக்க வாய்ப்பே இல்லை என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். தவெக அரசு பதவியேற்பு விழாவுக்கு கூட பிரியா வரவில்லை என்றும் விஜய் முதல்வராக பதவியேற்று கடந்த 15 நாட்களாகியும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவே இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிரியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விடுப்பில் இருந்த பிரியா, நேற்றைய தினம் மாமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: முதல்வரை இப்போதைக்கு சந்திக்க வாய்ப்பில்லை, மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் புதிய அரசு பொறுப்பேற்பு நிகழ்விற்கு தங்களளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என துணை மேயர் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பெரும்பான்மை பெறாத நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதல்வர் விஜய் பொறுப்பேற்று 15 நாட்களாகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இதுவரை முதல்வர் விஜயை நேரில் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேயரின் இந்தச் செயலுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ் கவுன்சிலரின் குற்றச்சாட்டுகள்
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் 63-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சிவராஜ் சேகரன் முன்வைத்துள்ள விமர்சனங்களை பார்க்கலாம்.
பதவியேற்பு விழா புறக்கணிப்பு: "முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவை சென்னை மாநகராட்சியே முன்னின்று நடத்தியது. ஆனால், அதில் மேயர் பிரியா பங்கேற்கவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வரானபோது, அன்றைய சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."
மரியாதை நிமித்தமான சந்திப்பு இல்லை: புதிய முதல்வர் பொறுப்பேற்று 15 நாட்களாகியும், மேயர் பிரியா அவரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
பணிகளில் தொய்வு: மேயர் பிரியா மக்கள் பணிகள், மாநகராட்சி கூட்டங்கள் மற்றும் அலுவலக வருகை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
மேயரின் முக்கியக் கடமைகள் என்னென்ன?
இந்தச் சர்ச்சை ஒருபுறமிருக்க, சென்னை போன்ற ஒரு பெருநகர மேயரின் முக்கியப் பொறுப்புகளாக பின்வருபவை சுட்டிக் காட்டப்படுகின்றன.
அடிப்படை வசதிகள்: நகரின் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
சுகாதாரம் மற்றும் தூய்மை: குப்பை அகற்றுதல், தூய்மைப் பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ முகாம்களைச் செயல்படுத்துதல்.
நிர்வாகப் பொறுப்புகள்: மாநகராட்சி கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, வளர்ச்சித் திட்டங்களை கண்காணிப்பது, திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது.
திமுக தரப்பு விளக்கம்
காங்கிரஸ் கவுன்சிலரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பிலிருந்து உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு மேயர் பிரியாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு வரவில்லை. அதன் காரணமாகவே அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும், புதிய முதல்வரைச் சந்திப்பதற்கான சூழல் இதுவரை அமையவில்லை. வரும் நாட்களில் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கும்போது, மேயர் பிரியா கட்டாயம் கலந்துகொண்டு அவருக்கு உரிய வரவேற்பு அளிப்பார்."
அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சாலை கட்டமைப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிந்த இந்த முக்கியக் கூட்டத்திலும் மேயர் பிரியா கலந்து கொள்ளவில்லை. இது, புதிய அரசுடன் சென்னை மாநகராட்சி காட்டும் ஒத்துழைப்பு மற்றும் மேயரின் ஈடுபாடு குறித்த விவாதங்களை கேள்விக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications