சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து!
சென்னை: ஒரு கட்டத்தில் குடும்ப சென்டிமென்ட், மாமியார்-மருமகள் மோதல், முத்து-மீனா chemistry என ரசிகர்களை கட்டிப்போட்ட சிறகடிக்க ஆசை சீரியல், இப்போது மீண்டும் பரபரப்பான திருப்பங்களால் வேகம் பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்றைய எபிசோடில் விஜயா எடுத்த முடிவு, முத்து எதிர்பாராத சிக்கலில் சிக்கியது, ரோகிணியின் கோபம் என அடுத்தடுத்த சம்பவங்கள் ரசிகர்களை மீண்டும் டிவி முன் உட்கார வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

வேலைக்கு கிளம்பும் விஜயா
மீனா வீட்டில் தங்கியிருப்பது விஜயாவுக்கு உள்ளுக்குள் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வீட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர் என்ற எண்ணத்தில் இருந்த விஜயாவுக்கு, தற்போது சூழ்நிலை மாறிவிட்டதாக தோன்றுகிறது. இதனால் தானும் சம்பாதித்து தனக்கான மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதற்காக தனது தோழி பார்வதியை சந்தித்த விஜயா, தனக்கு ஏதாவது வேலை பார்த்து தரும்படி கேட்கிறார். அப்போது டான்ஸ் மாஸ்டர் வேலை ஒன்று இருப்பதாக தெரிந்ததும் உடனே அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சிக்கிறார். "எனக்கு அனுபவம் இருக்கு... இந்த வேலை ஈஸியா கிடைக்கும்" என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறார்.
அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த விஜயா
வீட்டுக்கு திரும்பிய விஜயா, கணவர் அண்ணாமலையிடம் வேலைக்கு போகப்போவதாக சொல்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை அதிர்ச்சியடைந்து, "இத்தனை வருடம் இல்லாமல் இப்போ எதுக்கு?" என கேட்கிறார். ஆனால் விஜயா வழக்கம்போல பின்வாங்கவில்லை.
"நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்கல... தகவல் தான் சொல்றேன்" என்று நேரடியாக சொல்லி விடுகிறார். இதை பார்த்த மீனாவின் அம்மா சந்திரா கூட ஆச்சரியப்படுகிறார். ஆனால் விஜயாவின் மனதில் ஒரே எண்ணம்-'நானும் சம்பாதிப்பேன்'.
முத்துவுடன் நேரடி மோதல்
இந்த விஷயம் தெரிந்ததும் முத்து "நீங்க எதுக்கு வேலைக்கு போகணும்?" என்று கேட்க, விஜயா அதற்கும் நேரடி பதில் தருகிறார்.
"மத்தவங்க சம்பாதிக்கலாம்... நான் சம்பாதிக்கக்கூடாதா? சொந்தமா சம்பாதிச்சா தான் இங்க மரியாதை கிடைக்கும்" என்று சொல்கிறார். இத்தனை நாள் வீட்டுக்குள் அதிகாரம் செலுத்திய விஜயா இப்போது வெளியுலகில் காலடி எடுக்க முடிவு செய்திருப்பது சீரியலின் கதையையே மாற்றக்கூடிய திருப்பமாக இருக்கிறது.
ரோகிணியின் கோபம்
மறுபக்கம் ரோகிணியின் கோபமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தன் அம்மாவுடன் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது, சீரியலில் மாமியாரை மருமகள் அறையும் காட்சியை பார்த்து கைதட்டி ரசிக்கிறார்.
"எனக்கு வர்ற கோபத்துக்கு என் மாமியார் கையில் கிடைச்சா நானும் இப்படி தான் பண்ணிருப்பேன்" என்று அவர் சொல்வது, அடுத்த நாட்களில் வீட்டில் பெரிய வெடிப்பு வரப்போகிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
இந்த காட்சிகளை அமைதியாக கவனிக்கும் கிரிஷ் இருப்பதும், பின்னர் இது பெரிய பிரச்சனையாக மாறுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

முத்துவுக்கு புதிய தலைவலி
இதற்கிடையில் முத்துவின் வாழ்க்கையிலும் புதிய சிக்கல் தொடங்குகிறது. சவாரிக்கு சென்ற அவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அவரது அம்மாவுடன் காரில் அழைத்து செல்கிறார். அப்போது அந்த பெண்ணின் அம்மா தான் ஜூஸ் வாங்கிட்டு வரேன் என்று காரை விட்டு இறங்கி போகிறார் முத்துவும் தனக்கு போன் வந்ததால் போனே பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பெண் காரிலிருந்து இறங்கி வேறு ஆட்டோவில் ஏறிச் செல்கிறார். முத்து துரத்திச் சென்றாலும் பிடிக்க முடியவில்லை.
இது சாதாரண சம்பவமா? இல்லை முத்துவை பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கும் புதிய ட்ராக்கா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

மீண்டும் வேகம் பிடிக்குமா சிறகடிக்க ஆசை?
கடந்த சில வாரங்களாக கதையில் சற்று மந்தநிலை இருந்ததாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், இப்போது ஒரே எபிசோடில் பல திருப்பங்கள் வர ஆரம்பித்துள்ளன. விஜயாவின் வேலை முடிவு, ரோகிணியின் மனநிலை, முத்துவின் புதிய பிரச்சனை-இந்த மூன்று ட்ராக்குகளும் சேர்ந்து சீரியலை மீண்டும் டிராக்கில் கொண்டு வருமா என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications