சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டண சலுகைகள் ரத்து! தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரயில்வே அளித்த விளக்கம்
டெல்லி: ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிறப்பு ரயில்களில் அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தற்போது மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் மார்ச் 2020 முதல் மார்ச் 31, 2022 வரை ரயில்களில் பயணித்த 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே அளிக்கவில்லை.
இதில் 4.46 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 2.84 கோடி பேர் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 8,310 மூன்றாம் பாலித்தனவரும் அடங்குவர். அந்த காலகட்டத்தில் ரயில்வே துறைக்கு மூத்த குடிமக்கள் மூலம் ரூ 3,464 கோடி கிடைத்தது. இதில் அவர்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் கிடைத்த ரூ 1500 கோடி வருவாயும் அடங்கும்.
மூத்த குடிமக்களில் ஆண் பயணிகள் மூலம் ரூ 2,082 கோடியும் பெண் பயணிகள் மூலம் ரூ 1,381 கோடியும் மூன்றாம் பாலினத்தவர்கள் மூலம் ரூ 45.58 லட்சமும் வருமானமாக கிடைத்தது. மூத்த குடிமக்களுள் பெண் பயணிகளுக்கு 50 சதவீத சலுகை உள்ளது. மூத்த குடிமக்களில் ஆண்களும் மூன்றாம் பாலினத்தவர்களும் அனைத்து வகுப்புகளிலும் 40 சதவீதம் பயண கட்டண சலுகையை பெறலாம்.

இந்த சலுகையை பெற பெண்களுக்கு 58 வயதும் ஆண்களுக்கு 60 வயதும் முடிந்திருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான சலுகை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில்தான் 2016ஆம் ஆண்டு இந்த சலுகைகளை, மூத்த குடிமக்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே அறிவித்தது. 53 விதமான பயண சலுகைகளை பல்வேறு தரப்பிலான பயணிகளுக்கு வழங்குவதால் ஆண்டுதோறும் ரயில்வே துறைக்கு ரூ 2000 கோடி சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகளை தர வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் 2,242 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்திருப்பதாக தென்னக ரயில்வே பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications