பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. ரயில் டிக்கெட் முன்பதிவு நாட்களை குறைத்து ஷாக் கொடுத்த மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில் போக்குவரத்தைதான். இப்படி இருக்கையில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 120லிருந்து 60ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலக அளவில் மிகவும் பழமையான ரயில் சேவைகளில் இந்தியன் ரயில்வேவும் ஒன்று. இந்தியாவில் 1853ம் ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 2.3 கோடி பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில் கொண்டு சேர்க்கிறது. இந்தியன் ரயில்வேயை சுமார் 13 லட்சம் பணியாளர்கள் இயக்குகின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்தியன் ரயில்வே சமீப காலமாக தனது பொலிவை இழந்து வருகிறது.

குறிப்பாக அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகள், ரயில்வே துறை மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் ரயில்வேயில் ஏற்பட்ட மோசமான விபத்தாக பார்க்கப்பட்டது. இதையடுத்து ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
விபத்துகளை குறைக்க ரயில்வே துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் விபத்துக்கள் குறையவில்லை. சமீபத்தில் கூட சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கியது. இப்படியான விபத்துகளால் ரயில் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், போதுமான ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்கிற புகார்களும் குவிந்துள்ளன. சாமானிய மக்கள்தான் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிப்பது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்குவது, கூடுதல் ரயில்களை இயக்குவது, பண்டிகை நாட்களில் நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தவிர ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, வந்தே பாரத் போன்ற அதிக கட்டணம் உள்ள ரயில்களை தயாரிப்பதற்கு பதில், குறைந்த கட்டணம் கொண்ட ரயில்களை மத்திய அரசு தயாகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
ஆனால் இந்த கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்துவதற்கு பதில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 120லிருந்து 60ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ரயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை 120 நாட்கள் (4 மாதங்களுக்கு) முன்பு புக் செய்துக்கொள்ள முடியும். தற்போது இந்த புதிய அறிவிப்பு மூலம், இனி வரும் நாட்களில் 60 நாட்களுக்கு (2 மாதங்களுக்கு) முன்னர் மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பலரும் டிக்கெட் புக்கிங்கிற்காக வெயிட் செய்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், திடீரென முன்பதிவு நாட்களை குறைத்திருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications