சூப்பர்! ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 202. மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டன. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் நிலையில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மீண்டும் பொது பெட்டிகள்
இருப்பினும், முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளிட்ட பொது பெட்டிகள் இணைக்கப்படாமலேயே இருந்தது. இதனால் சிறிய தூரம் பயணம் செய்வோரும் வேறு வழியின்றி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். கொரோனா பரவ தொடங்கிய போது எடுக்கப்பட்ட இந்த முடிவு பல மாதங்களாகத் தொடர்ந்தது. இந்தச் சூழலில் மீண்டும் பொது பெட்டிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இது சிறிய தூரம் பயணிப்போருக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் "வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள தடங்களில் இயங்கும் ரயில்களில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல பொது பெட்டிகளை இணைக்கலாம். அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கலாம்.மேலும், தற்போது இயக்கப்படும் விடுமுறைக் கால சிறப்பு ரயில்களிலும், தேவைக்கு ஏற்ப இதேபோல பொது பெட்டிகளை இணைக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகாரி விளக்கம்
ரயில்வே துறையில் இந்த அறிவிப்பு குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உதாரணமாக, ஒரு ரயிலில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் நான்கு முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் இருந்திருந்தால், அவை இப்போது 2S முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளில் இருந்து முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படும்

சிறப்பு ரயில்கள்
மேலும், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்த முன்பதிவு பெட்டிகளும், அதே எண்ணிக்கையில் தொடரும். இது இப்போது இயங்கும் வழக்கமான ரயில்களுக்கும் பொருந்தும். விடுமுறைக் கால சிறப்பு ரயில்களும் இது பொருந்தும்" என்று அவர் தெரிவித்தார். கொரோனா குறைந்த பின்னர், முன்பதிவு தேவைப்படாத பொது பெட்டிகளை இணைக்க வேண்டும் எனத் தமிழகத்தில் இருந்து பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications