ராமர் கோவில் கும்பாபிஷேக விழா.. ரயில் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு.. பயணிகளுக்கு வெளியான செம அப்டேட்
டெல்லி: வரும் 22 ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ரயில் பயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 9,000 ரயில் நிலையங்களில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டடக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன.

இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அயோத்தி கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் கும்பாபிஷேக விழாவை பார்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள 9,000 ரயில் நிலையங்களில் உள்ள பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications