இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா கேஸ்! இஸ்ரேலில் உருவான புதிய வேரியண்ட்! அடுத்த அலை ஏற்படுமா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி: கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 202இல் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா நம்மை ஒரு வழி செய்துவிட்டது. இதனால் கிட்டதட்ட அனைத்து துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கொரோனா வேக்சின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது தான் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். இதனிடையே இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

கொரோனா
சுமார் 3.5 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 10ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 400ஐ கடந்தது. அன்றைய தினம் நாட்டில் 441 பேருக்கு கொரோனா உறுதியானது. வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்துக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500ஐயும் கடந்தது. இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் 600ஐ எட்டியுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்தே வருகிறது. கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

என்டமிக்
ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா வைரசால் மூன்று அலை ஏற்பட்டுள்ளது. இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து ஊரடங்கு விதிக்கப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், மீண்டும் பெரியளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் இப்போது என்டமிக் கட்டத்தில் உள்ளதாகவும் வைரஸ் அதிகரிப்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்கள்
இது குறித்து வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் கூறுகையில், "இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.. அதேநேரம் மறுபுறம் இன்ஃப்ளூயன்ஸா கேஸ்களும் அதிகரிக்கிறது. இதனால் நாம் நிலைமையைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா இந்தாண்டு அதிகரித்துள்ளது உண்மை தான். அதேநேரம் கொரோனா அதிகரிக்க இதுதான் காரணம் என்று நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கொரோனா அலைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு காலத்தில் ஏற்படும். இதற்கும் பருவ காலத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

கவலை தேவையில்லை
இப்போது இந்தியாவில் ஓமிக்ரான் வேரியண்ட் தான் பரவி வருகிறது. இது லேசான மாறுபாடு தான். இதன் தீவிரமும் குறைவாகவே இருக்கிறது. எந்தவொரு வைரசாக இருந்தாலும் தொடர்ந்து உருமாறுவது இயல்பான ஒன்று தான்" என்று அவர் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும் கூட மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட்
இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் இப்போது புதிதாக கொரோனா வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இரண்டு பேருக்கு இந்த புதிய வேரியண்ட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஓமிக்ரான் பிஏ1 மற்றும் பிஏ2 வேரியண்ட்களில் கலவை போல இருக்கிறது. அவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை அறிகுறியாக இருந்துள்ளது. ஒரே செல்லில் இரண்டு வைரஸ்கள் இருப்பதால் இது நிகழ்வதாகவும், இரண்டு வைரஸ்களும் மரபணுவைப் பரிமாறிக் கொள்வதால் புதிய வேரியண்ட் உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்புளுயன்சா
கொரோனா ஒரு பக்கம் அதிகரிக்கும் நிலையில், இன்புளுயன்சா பாதிப்பும் நாட்டில் உயர தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் இன்ப்ளூயன்ஸா அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான் என்ற போதிலும், இப்போது உருமாறிய H3N2 இன்புளுயன்சா பரவுவதே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. இந்தியாவில் பரவலாக இன்புளுயன்சா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது சுவாச நோய் பகுதியையும் தாக்குவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications