“ட்விஸ்ட்” - புத்துணர்ச்சி பெறுமா காங்கிரஸ்? நெருங்கும் தலைவர் தேர்தல்.. ராஜஸ்தான் முதல்வரின் முடிவு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.

உட்கட்சி பூசல்
காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பு மற்றும் அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாகவும் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை.

காங்கிரஸ் செயற்குழு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கூடியது. அதில், அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ராகுலை வலியுறுத்தும் காங்கிரஸ்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே இருக்க வேண்டும் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கிளைகள் ராகுல் காந்தியே தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

அசோக் கெலாட்
ஆனால், காந்தி குடும்பம் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை தலைவராக நியமிக்க விரும்பியதாக கூறப்பட்டது. இதற்கிடையே கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூரும் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தொடக்கத்தில் போட்டியிட மறுத்த அசோக் கெலாட் தற்போது இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications