எந்திரன் சிட்டி போல நெருப்பில் புகுந்து குழந்தையை மீட்ட காவலர்! குவியும் பாராட்டு, கூடவே பதவி உயர்வு
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென மதக்கலவரம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் கரௌலி நகரில் சனிக்கிழமை திடீரென இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையின் போது, தனது உயிரைப் பணயம் வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைக்குழந்தையைக் காப்பாற்றியச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலவரம்
கடந்த சனிக்கிழமை பல்வேறு மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் நவ் சம்வத்சர் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குக் கலவரம் ஏற்பட்டது.

போலீஸ்
இதையடுத்து கரௌலியில் பகுதியில் இருந்த பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் அங்குப் பலரும் தாக்கப்பட்டனர். அப்போது பற்றி எரியும் கட்டிடங்களுக்கு நடுவே ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனது உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் படத்தை ஷாம்லியின் போலீஸ் சூப்பிரண்டு சுக்ரிதி மாதவ் மிஸ்ரா ஐபிஎஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இதையடுத்து அந்த போலீஸ் கான்ஸ்டபிளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வைரல்
சனிக்கிழமை கரௌலியில் ஏற்பட்ட வன்முறையில் வீடுகள் மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டது. அப்போது எரிந்து கொண்டிருந்த கட்டிடம் ஒன்றில் மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் மாட்டிக் கொண்டனர். அப்போது தான் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து நான்கு பேரையும் இந்த போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றியுள்ளார். இவர் கரௌலி கோட்வாலி காவல் நிலையத்தில் பணிபுரியும் 31 வயதான நேத்ரேஷ் ஷர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதல்வர் பாராட்டு
இந்தப் படம் வைரலான நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மாவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார். வன்முறையின் போது, உயிரைப் பணயம் வைத்து தைரியமாகக் கடமையைச் செய்துள்ளீர்கள் என முதல்வர் பாராட்டினார். மேலும், நேத்ரேஷ் ஷர்மாவை தலைமைக் காவலராகப் பதவி உயர்வு செய்யவும் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதற்கு நேத்ரேஷ் ஷர்மா தான் கடமையை மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

காரணம்
மேலும் இந்த வன்முறைக்கு மத்திய அரசே காரணம் என்றும் மாநிலத்தில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். ஒருவர் தனது மதத்தைப் பிரசாரம் செய்ய உரிமை உள்ளது ஆனால், பாடல்கள், கோஷங்கள் உள்ளிட்டவை உடன் திட்டமிட்டு சில சமூக விரோதிகள் இங்குக் கலவரத்தைத் தூண்டி உள்ளனர். இதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

போலீஸ்
இந்தச் சம்பவம் தொடர்பாக 46 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஏழு பேர் விசாரணைக்காகத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். மேலும், கரௌலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தணிக்க மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications