கொடைக்கானலில் படித்தவருக்கு ராஜஸ்தானில் அடித்த அதிர்ஷ்டம்.. எக்ஸிட் போல் முடிவால் பாஜக ஹேப்பி
டெல்லி : ராஜஸ்தானில் இதுவரை வந்த கணிப்புகள் எல்லாமே பாஜகவே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளன. இந்நிலையில் Peoples Pulse நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 95-115 இடங்களையும் காங்கிரஸ் 73-95 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-12 இடங்களையும் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. நம்மூரில் உள்ள அதிமுக திமுக போல், அங்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து வருடங்கள் ஆண்ட கட்சி அடுத்த முறை ராஜஸ்தானில் மாறிவிடும். இதுதான் எதார்த்தமான ஒன்றாக ராஜஸ்தானில் காலம் காலமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவானதால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள்.
ஏனெனில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் Peoples Pulse நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 95-115 இடங்களையும் காங்கிரஸ் 73-95 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-12 இடங்களையும் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பளார் என்று பார்த்தால் வசந்த்ரா ராஜே தான். இவர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தவர் ஆவார். இவர் ஏற்கனவே ராஜஸ்தானில் முதல்வராக இருந்துள்ளார். எனவே பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications