துணை முதல்வராக இருந்தும்.. ராஜஸ்தானில் ஆட்சியை கலைக்க சச்சின் பைலட் துடிப்பது ஏன்? 3 காரணம் இருக்கு
டெல்லி: நன்றாக போய்க் கொண்டிருந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியில் திடீரென பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்துள்ளதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளது அந்த மாநில அரசியல்.
சுமார் 40 வயதுதான் ஆனபோதிலும், ஒருவருக்கு, துணை முதல்வர் பதவி கிடைப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. ஆனால் அந்த வகையில் சச்சின் பைலட் லக்கி.
அப்படியிருந்தும், எதற்காக அவர்கள் அரசியல் கலகத்தில் ஈடுபடுகிறார் என்று விசாரித்த போது, அவரிடம் மொத்தம் 3 கோரிக்கைகள் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ராஜஸ்தான் சட்டசபை பலம்
200 உறுப்பினர் கொண்டது ராஜஸ்தான் சட்டசபை. காங்கிரசுக்கு தனித்து 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 13 சுயேச்சைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் பாரதிய பழங்குடியினர் கட்சியின் 2, ராஷ்டிரிய லோக்தள் கட்சியின் 1 எம்எல்ஏ ஆதரவும் ஆட்சிக்கு உண்டு. எனவே,
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்பிக்க 101 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது.

சச்சின் பைலட் ஆதரவு
ஆனால், சுமார் 22 எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அசோக் கெலாட் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இவர்கள் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக சச்சின் பைலட், தெரிவித்த நிலையில், அது இப்போது குறைந்து உள்ளது. அந்த வகையில் அசோக் கெலாட் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்.

3 காரணங்கள்
ஆளும் கட்சிக்கு எதிராகவே கலகக் குரல் எழுப்புவதற்கு என்ன தான் காரணம் என்று விசாரித்தபோது, சச்சினிடம் இதற்கு மொத்தம் மூன்று காரணம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பு தெரிவிக்கிறது. முதல் கோரிக்கை, அவர் முதல்வராக வேண்டும் என்பது. அசோக் கெலாட் முதல்வர் பதவியில் தொடர கூடாது என்பது மிக முக்கியமான கோரிக்கை.

விடாப்பிடி
அடுத்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே அந்த பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது அடுத்த கோரிக்கை. மூன்றாவது முக்கியமான கோரிக்கை, தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிக பதவி இடங்களை கொடுக்கவேண்டும் என்பது ஆகும்.

காங்கிரஸ் தலைமைக்கு தர்ம சங்கடம்
இதில் அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து விலக்குவது என்பது காங்கிரஸ் மேலிடத்துக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. மற்ற இரண்டு கோரிக்கைகளை வேண்டுமானால் பரிசீலிக்க தயாராக இருக்கிறது காங்கிரஸ் மேலிடம். இருப்பினும் முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சச்சின் விடாபிடியாக இருப்பதால் இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.

பின்னணியில் பாஜக
காங்கிரசில் நடக்கும், இந்த உட்கட்சி பிரச்சினையின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் இந்த மூன்று கோரிக்கைகள்தான் தங்களுக்கு முக்கியமானது. பின்னணியில் வேறு யாரும் இல்லை என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பூசலால் எப்படி பாஜக ஆட்சியை பிடித்தததோ, அதே போன்று இங்கும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜக முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications