ராஜஸ்தானில் 300 ஆண்டு பழமைவாய்ந்த சிவன் கோயில் இடிப்பு.. மாறி மாறி குற்றம்சாட்டும் காங்கிரஸ்- பாஜக!
டெல்லி: ராஜஸ்தானில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயில் இடித்து தள்ளப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில் 5 நபர்களை கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வாரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் புல்டோசர் உதவியுடன் இடிக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்த கோயிலை இடித்ததாக கூறி ராஜ்கர் லக்ஷ்மண்கர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹ்ரி லால் மீனா உள்பட 3 பேர் மீது கோயில் பூசாரி புகார் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்
இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா, கூறுகையில் கரௌலி மற்றும் ஜஹான்கிர்புரியில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு கண்ணீர் வடித்த காங்கிரஸ், தற்போது இந்துக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. இதுதான் காங்கிரஸின் மதசார்பின்மை என தெரிவித்துள்ளார்.

அமித் மால்வியா
இதே போல் கடந்த 18ஆம் தேதி அமித் மால்வியா வெளியிட்ட ட்வீட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி எந்த வித முன்னெச்சரிக்கை நோட்டீஸும் இன்றி ராஜஸ்தான் மாநிலம் ராஜ்காரில் இந்துக்களுக்கு சொந்தமான 85 வீடுகளும் கடைகளும் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப்பட்டன என குற்றம்சாட்டினார்.

பாஜக தலைவர்
அது போல் பாஜக தலைவர் ஷெஹ்ஜாத் பூனாவாலா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டியுள்ளார். பூனாவாலா கூறுகையில் ராஜஸ்தானில் கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காக்கிறார். கலவரக்காரர்களுக்கு எதிராக புல்டோசர் பயன்படுத்தினால் அது மதகலவரம், இதே இந்துக்களின் நம்பிக்கை மீது புல்டோசரை பயன்படுத்தினால் அது மதசார்பின்மை என ட்வீட் போட்டுள்ளார்.

கோயில்கள் சிலைகள்
அது போல் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் ஜிஎஸ் டோட்டாசாரா கூறுகையில் கடந்த பாஜக ஆட்சியில்தான் ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் கோயில் இடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. கோயில்களையும் சிலைகளையும் காங்கிரஸ் கட்சி சீர்குலைப்பதாக சொல்வது மிகவும் தவறு. இதுதான் பாஜகவின் அஜெண்டா. தேர்தல் வரும் நேரத்தில் மதகலவரத்தை உண்டு செய்வதே பாஜகவின் வேலை.

5 பேர் கொண்ட குழு
கோயிலை இடிக்குமாறு ஆட்சியர் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். மீண்டும் சிலைகளை கோயிலுக்குள் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றார். இவ்வாறு காங்கிரஸும் பாஜகவும் கோயில் இடிப்பு விவகாரத்தில் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்த கோயில் இடிப்பு விவகாரத்தில் உண்மையை கண்டறிவதற்காக சிகார் எம்பி சுவாமி சுமேதானந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. இவர்கள் ராஜ்கார் சென்று உண்மையான அறிக்கையை ராஜஸ்தான் பாஜக தலைமையிடம் ஒப்படைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஹாங்கிர்புரி- கரௌலி
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. பின்னர் உச்சநீதிமன்றமே தலையிட்டு ஆக்கிரமிப்புகள் இடிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டது. அது போல் ராஜஸ்தானில் கரௌலியில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் இந்து சமூகம் நடத்திய இரு சக்கர வாகன ஊர்வலத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கரௌலி பகுதிக்கு வந்த போது இந்துக்களின் ஊர்வலத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இங்கு வன்முறை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications