1984ல் சீக்கியர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது 'பிரதமர் ராஜீவ்' அலுவலகம்தான்.. பூல்கா குற்றச்சாட்டு
டெல்லி: இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு சீக்கியர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டதே பிரதமர் அலுவலகம்தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மூத்த வழக்கறிஞர் பூல்கா.
சீக்கியர் படுகொலைக்கு நீதிகேட்டு போராடி வரும் பூல்கா இது தொடர்பாக கூறியதாவது:
1984-ல் சீக்கியர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் அலுவலகம்தான். இதற்கான ஆதாரங்களை நானாவதி மற்றும் மிஸ்ரா கமிஷன்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

மொரார்ஜி தேசாய் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சாந்தி பூஷண். அவர் நானாவதி கமிஷன் முன்பாக பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் 1984ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மத்திய அமைச்சர் நரசிம்மராவை நேரில் சந்தித்தார் சாந்தி பூஷண். சீக்கியர் படுகொலையைத் தடுக்க ராணுவத்தை அழைக்க வேண்டும் என நரசிம்மராவிடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து அமைச்சர்களுக்கு இடையேயான நேரடி தொலைபேசியில் பேசினார் நரசிம்ம ராவ். ஆனால் வருத்தத்துடன் போனை வைத்துவிட்டு சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங், தேவிலால், சரத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்றனர்.
ஜனாதிபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ராணுவத்தை அனுப்பாமல் தடுத்தது பிரதமர் அலுவலகம். சப்தர்ஜங் என்கிளேவ் பகுதிக்கு ராணுவத்தின் ஒரு பிரிவு வந்தது. அங்கே சீக்கியர்களை காப்பாற்ற அது முயற்சித்தது.
ஆனால் அதிகாரி ஒருவர் வந்து ராணுவத்தை அங்கிருந்து புறப்படுமாறு உத்தரவிட்டார். தலைநகர் டெல்லியில் 5,000 ராணுவத்தினர் அன்று இருந்தனர். அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தால் 2000 சீக்கியர்கள் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்.
ரஹாப் கஞ்ச் குருத்வாராவுக்கு தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் நேரடியாக வந்தார். தம்மை பிரதமர் அனுப்பியதாகவே கமல்நாத் கூறினார். இந்துக்கள் யாரேனும் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்களா? என ஆய்வு செய்ய அவர் வந்தார்.
குருத்வாராவுக்குள்ளேயே கமல்நாத் முன்னிலையில் சீக்கியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இவை அத்தனையும் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையிலே நடைபெற்றன.
இவ்வாறு பூல்கா கூறினார்.












Click it and Unblock the Notifications