மகாத்மா காந்திக்கு பிறகு மக்கள் உணர்வுகளை புரிந்துகொண்ட ஒரே தலைவர் மோடி தான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!
டெல்லி: டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவின் போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''மகாத்மா காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மோடிதான் என்றும், இவ்வாறு கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற The Architect of the New BJP- என்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியதாவது:-
டெல்லியில் நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?
மோடிக்கு நிகராக யாரும் இல்லை
சித்தாந்தத்தில் எந்த சமரசமும் மேற்கொள்ளாமல் புதுமையான யுக்தியுடன் பாஜகவை தேர்தலில் வெற்றி பெறும் இயந்திரமாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். பிரதமர் மோடிக்கு நிகராக சமகால அரசியலில் யாரும் இல்லை. பாஜகவின் சித்தாந்தம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் கடந்த 8 ஆண்டுகளில் பாஜக பெற்று வரும் அசாத்திய வெற்றிக்கு பங்களித்து இருக்கலாம். அதேவேளையில், இந்த கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதிலும் அவர்களின் நம்பிக்கையை பெறுவதிலும் மோடியின் யுக்திக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை.
உலகத் தலைவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டது
பாஜக மற்றும் ஆர்.எ.எஸ் ஒதுக்கிய பணிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்து முடித்தார். சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியை போல தலைவர் வேறு யாரும் இல்லை. பிரதமர் மோடியின் நீடித்த செல்வாக்கு இந்தியர்கள் மட்டும் அல்ல.. உலகத் தலைவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு அலை ஒரு முக்கிய காரணியாக இருக்கும். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்து மக்கள் சலிப்படையவில்லை.
எதிர்ப்பே இல்லை..
அடுத்த லோக்சபா தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் நிலையில், 2029-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலையே எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசியல் அனலிஸ்ட்கள் கூறுகின்றனர். பிரதமரின் ஆளுமை மற்றும் நிறுவன திறன்கள், தெய்வீகத் திறன் இல்லாமல் இது சாத்தியமில்லை என்றே நான் நம்புகிறேன். சாதி மற்றும் சமூகத்தின் எல்லைகளை உடைத்து எதிர்ப்பே இல்லை என்ற ஒரு மாடலை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
போட்டியாளரை தேடிக்கொண்டு இருக்கின்றனர்
பிரதமருக்கு எதிர்க்கக்கூடிய போட்டியாளரை சிலர் தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் அப்படி ஒருநபர் கிடைக்கவில்லை. மகாத்மா காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிய ஒரே தலைவர் மோடிதான் என்று நாம்புகிறேன். இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கடினமான முடிவுகளையும் துரிதமாக எடுக்கும் பிரதமர் மோடியின் துணிச்சல் அவருக்கு தனி அந்தஸ்தை கொடுத்துள்ளது.
அந்தஸ்தை விரிவுபடுத்தியுள்ளது
விரைவான மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் மோடியின் தைரியம் மக்கள் மத்தியில் அவரது "சின்னமான" அந்தஸ்தை விரிவுபடுத்தியுள்ளது. பிரதமர் மோடி களஅரசியலையும் மக்களின் உணர்வுகளையும் சவால்களையும் உணர்ந்து செயல்படுகிறார். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.