நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் உண்ணாவிரதம்.. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் திடீர் அறிவிப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.
வேளாண் மசோதா தாக்கலின் போது ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு இன்று காலை நேரில் சென்று ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். சக எம்பியாக வந்து உங்களை சந்தித்துள்ளேன். நான் ராஜ்யசபா துணை தலைவராக இங்கு வரவில்லை என்று கூறி அவர்களை ஆச்சர்யப்பட வைத்தார். இவரது செயலை பிரதமர் மோடி உள்பட பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். உண்ணாவிரதம் தொடர்பாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார்.
செப்டம்பர் 20 ம் தேதி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தனக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதற்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கப்போவதாக ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications