ராஜ்யசபா: திமுகவின் 6 எம்.பிக்கள் உட்பட 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்- ஒருவாரம் சபைக்கு வர தடை!
டெல்லி: ராஜ்யசபாவில் திமுகவின் 6 எம்.பிக்கள் உட்பட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் 19 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் ஒரு வாரம் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை பண வீக்க விகிதம், பொருளாதார சிக்கல், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்; மத்திய விசாரணை ஏஜென்சிகளை எதிர்க்கட்சிகளை நோக்கி ஏவிவிடக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்துவதால் சபை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
லோக்சபாவில் இடையூறு ஏற்படுத்தியதாக எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த 4 பேரும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் சபாநாயகர் தடை விதித்தார்.
ராஜ்யசபா எம்பியாக பதவியேற்கும் இளையராஜா..அதிர்ந்த டெல்லி..மேள தாளம் முழங்க வரவேற்பு
இந்நிலையில் ராஜ்யசபாவில் மேலும் 19 எம்.பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் என்.ஆர். இளங்கோன், சண்முகம், கிரிராஜன், அப்துல்லா, கனிமொழி சோமு, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுகவின் 6, திரிணாமுல் காங்கிரஸின் 7 எம், டிஆர்எஸ் கட்சியின் 3 எம்.பிக்கள் இவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் ராஜ்யசபா சபை நடவடிக்கையில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.