ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது திடீரென எழுந்த கோஷம்.. விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகை தூக்கிய பெனிவால்
டெல்லி: இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றியபோது, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி) எம்.பி. ஹனுமான் பெனிவால் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செங்கோட்டையில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிஷ்டவசமானது, சட்டம்-ஒழுங்கை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.
3 விவசாய சட்டங்களை பாராட்டி பேசினார். 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த நிலையில், ராம்நாத் கோவிந்த் அந்த சட்டங்களை புகழ்ந்துரைத்தார்.
அப்போது, திடீரென விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி) எம்.பி. ஹனுமான் பெனிவால் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டார். ஜெய் கிஷான் என்று அவர் கோஷமிட்டார்.
விவசாய சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் பாராட்டு.. செங்கோட்டை சம்பவத்திற்கு கண்டனம்