குடும்ப அட்டைதாரர்களுக்கு "இடி".. ரேஷனில் ரூ.2000 கோடி கி. அரிசி, கோதுமை மிஸ்ஸிங்! பகீர் ரேசன் மோசடி
டெல்லி: மத்திய அரசு அனுப்பும் 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதில்லை என்றும், இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 69,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் பகீர் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.. அந்தவகையில், விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் பொருட்கள்: அதேபோல, ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில அரசுக்கு அனுப்பி வருகிறது. அந்தவகையில், வருடத்துக்கு 5.24 கோடி டன் அரிசியும், 1.90 கோடி டன் கோதுமையும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆனால் இதில், 28 சதவீதம் மக்களுக்கு போய் சேருவதில்லையாம்.. கிட்டத்தட்ட 2 கோடி டன், அதாவது 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளை சென்றடைவதில்லை என்பது ஆய்வு ஒன்றில் தற்போது தெரிய வந்துள்ளது.
ஆய்வறிக்கை: சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியர் அசோக் குலாட்டி தலைமையிலான குழுவானது, கடந்த ஒரு வருடத்தில், அரசு அனுப்பிய பொருட்கள் மற்றும் பயனாளிகள் பெற்ற பொருட்களின் அளவை ஒப்பிட்டு, இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
ரேஷன் வினியோகத்துக்காக மாநில அரசுகளுக்கு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த ஆய்வு காலத்தில், 5.24 கோடி டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3.57 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றிருக்கிறது. 32 சதவீத அரிசி பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. 1.90 கோடி டன் கோதுமை அனுப்பப்பட்டதில், வெறும் 1.6 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில், 15 சதவீதம் மடைமாற்றப்பட்டுள்ளது.
3 முதல் மாநிலங்கள்: ஒட்டுமொத்தமாக இந்த அரிசி, கோதுமை தானியங்களில், 28 சதவீதம், அரசிடமிருந்து பயனாளிகளுக்கு செல்லும் வழியில் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன.. இப்படி மாயமாகும் ரேஷன் பொருட்கள், வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன... இதனால், இந்த ஒரு வருடத்தில் மட்டும், மத்திய அரசுக்கு 69,109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அந்த வருடத்தின் அரிசி மற்றும் கோதுமையின் விலை அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் குஜராத் போன்றவைதான் தானியங்கள் காணாமல் போகும் டாப் 3 மாநிலங்களாகும். ரேஷன் முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்காததுதான் இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்றாலும், ரேஷன் நடைமுறைகள் ஓரளவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால்தான், ரேஷன் பொருட்கள் மோசடி வெகுவாக குறைந்துள்ளது.
உத்தரபிரதேசம் டாப்: குறிப்பாக, பீகாரில் 2011 - 12ல் 68.7 சதவீதமாக இருந்த மோசடி, 2022 - 23ல் 19.2 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில், 69.4 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில், 33 சதவீத பொருட்கள் மடைமாற்றப்பட்டுள்ளன. ஆனால், ரேஷன் பொருட்கள் மாயமாவதில், உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications