நரிக்குறவன் இல்லை.. மரியாதை அவசியம்.. நரிக்குறவர் என்று மாற்றுங்கள்.. ரவிக்குமார் எம்.பி. நோட்டீஸ்
டெல்லி: நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 'நரிக்குறவன்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததை மாற்றம் செய்ய வேண்டும் என விசிக எம்பி ரவிக்குமார் திருத்த தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடோடி குழுக்களாக வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதனையடுத்து இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.
பெயர் காரணம்
தமிழ்நாட்டில் நாடோடிகளாக வாழும் இம்மக்கள் மலைகளில் வசிக்கும் குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அதாவது குறவர் சமூக மக்கள் தமிழை பூர்வீகமாக கொண்டவர்களாவார்கள். இவர்கள் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் வாழ்பவர்களாவார்கள். அதேபோல இவர்கள் சாதி பட்டியலில் எஸ்சி என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நரிக்குறவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இதிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் நடோடிகள். அவர்களுக்கு தமிழ் தாய்மொழி கிடையாது. இவர்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாவார்கள். இவர்களின் பேச்சு, உணவு, திருமணம் என அனைத்துமே குறவர் சமூக மக்களிடத்திலிருந்து வேறுபடும்.
மசோதா
இவர்களை மாநில அரசு 1951ம் ஆண்டு MBC பட்டியலில் சேர்த்தது. ஆனாலும் இவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் மாறவில்லை என்றும் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு தமிழ்த்தேசிய இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே பழங்குடியினர் பட்டியலில் வட மாநிலத்தவர்கள் அதிகமானோர் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், எனவே தமிழக அரசு இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆதரவளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பின்னணியில்தான் நாடாளுமன்றத்தில் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
மாற்றம்
இந்த மசோதாவில் 'நரிக்குறவன்' என்றும் 'குருவிக்காரன்' எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்திருக்கிறது. இதனை அரசு மாற்றம் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் திருத்த தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள நோட்டீஸில், நரிக்குறவன் என்பதை 'நரிக்குறவர்' எனவும் குருவிக்காரன் என்பதை 'குருவிக்காரர்' என்றும் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இப்படி 'ன்' என முடியும் சாதி பெயர்களை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னரே திமுக அரசு மாற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.