அலோபதி பற்றிய விவாதத்திற்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன்.. ராம்தேவ்விற்கு இந்திய மருத்துவ சங்கம் சவால்
டெல்லி: அலோபதி மருத்துவம் குறித்து ஊடகங்களுக்கு முன், விவாதம் நடத்தத் தயாராகவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் யோகா குரு பாபா ராம்தேவ்விற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும் யோகா மாஸ்டருமான பாபா ராம்தேவ்வுக்கும் அலோபதி மருத்துவர்களுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.
முதலில் அலோபதி மருத்துவம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராம்தேவ்வின் பேச்சுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.
அலோபதி விவகாரம்: உங்க அப்பனால கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவ் சர்ச்சை பேச்சு
பாபா ராம்தேவ்
இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டித்ததைத் தொடர்ந்து, இதற்காகப் பாபா ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். ஆனால், அந்த சிக்கல் முடிவதற்குள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக அவர் பேசுவது போலான வீடியோ வைரலானது. தடுப்பூசி குறித்து போலி தகவல்களைப் பரப்பும், அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தினர்.
நேரடி விவாதம்
இந்நிலையில், அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ்வுடன் நேரடியாக விவாதிக்கத் தயாராகவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகண்ட் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் அஜய் கண்ணா எழுதியுள்ள கடிதத்தில், "பதஞ்சலி நிறுவனத்திலிருந்து தகுதி வாய்ந்த மற்றும் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத வல்லுநர் குழுவை அமையுங்கள். அலோபதி மருத்துவம் குறித்து நேருக்கு நேராக விவாதிக்கலாம். இந்த விவாதத்தை அனைத்து ஊடகங்களுக்கு முன் நடத்தலாம்.
ஒரு கண்டிஷன்
பாபா ராம்தேவ்வும், அவரது உதவியாளர் பால்கிருஷ்ணாவும்கூட இதில் பங்கேற்கலாம். ஆனால் பார்வையாளர்களாக மட்டுமே. ஏனென்றால், அவர்கள் தங்கள் சான்றிதழ்களை இதுவரை இந்திய மருத்துவ சங்கத்திற்கு அனுப்பவில்லை. இந்த ஆரோக்கியமான விவாதத்திற்கான தேதி மற்றும் நேரத்தை நீங்களே தீர்மானியுங்கள். ஆனால், இடத்தை மட்டும் நாங்கள் முடிவு செய்கிறோம்.
குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும்
இந்த ஆலோசனை மூலம், நீங்கள்(பாபா ராம்தேவ்) உருவாக்கிய குழப்பம் ஒரு முடிவுக்கு வரும். இதற்கு மேல் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது எல்லாம் உங்கள் பொறுப்பு ஆகும். இதன் மூலம் அலோபதி மருத்துவத்திற்கும் ஆயுர்வேத மருத்துவத்திற்கும் இடையே கடந்த காலங்களிலிருந்த நல்லிணக்கத்தை மீட்டெடுக்க முடியும். இந்த நல்லிணக்கம் உங்கள் பொறுப்பற்ற மற்றும் சுயநல அறிக்கையால் பாதிக்கப்பட்டது என்பதை மறுந்துவிடக்கூடாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச துரோக வழக்கு
இந்திய மருத்துவ சங்கம் தனது மற்றொரு கடிதத்தில், பதஞ்சலி மருந்துகள் பயன்படுத்தப்பட்டும் மருத்துவமனைகளின் விவரங்களையும் கோரியுள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை, கொரோனா தடுப்பூசி பணிகள் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதற்காக ராம்தேவ் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மருத்துவ சங்கத்தினர் பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.