இதுதான் 'மெஜாரிட்டி' பவர்.. முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் உடனடி 'ரியாக்ஷன்'
டெல்லி: இந்தியாவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்க, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆக்சிஜன் கோரிக்கைக்கு மத்திய அரசுக்கு உடனே செவி சாய்த்திருப்பது சாதாரண நிகழ்வல்ல.
நாடே கொரோனா இரண்டாவது அலையால், ஜீவன் இழந்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் அழுகை, கூக்குரல், மரண ஓலம். வைரஸ் வந்துடுச்சே-னு மக்கள் பயப்படுவதை விட, ஐயோ ஹாஸ்பிட்டல்-ல இடம் கிடைக்காதே, ஆக்சிஜன் கிடைக்காதே என்று தான் அச்சப்படுகின்றனர்.
அந்தளவுக்கு பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவெனில், பல இடங்களில் சட்டவிரோதமாக ஆக்சிஜன் விற்கப்படுவது தான். அதுவும், 'எம்ப்டி' சிலிண்டரை ஏமாற்றி விற்கிறார்கள்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
தமிழகம் மட்டும் இதில் விதி விலக்கா என்ன? இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஆக்சிஜனை வைத்து அப்படி, இப்படி என ஒட்டிக் கொண்டிருந்த தமிழகம், இப்போது அதன் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அதன் அறிகுறியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த வாரம், 13 நோயாளிகள் உயிரிழந்தது நினைவிருக்கலாம். இவர்கள் மரணத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், செங்கல்பட்டு ஆட்சியர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். சுகாதாரத்துறை செயலாளரும் மறுத்தார். அதேசமயம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதையும் மறுக்க முடியாது.

தடுமாறிய தமிழகம்
இந்த சூழலில், ஆக்சிஜன் பற்றாகுறை குறித்த வழக்கில் ,கடந்த மே 6ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜரான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "மே 1 மற்றும் 2ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கான 220 டன் ஆக்சிஜன் கிடைத்தது. அதற்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறிய 475 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னில் 60 டன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பப்படுகிறது. பெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் மையத்தில் 150 டன் உற்பத்தி செய்யப்படுவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் தேவை பூர்த்தியாகிறது. தற்போது தமிழகத்துக்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவை. இதே நிலை நீடித்தால் தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே 475 டன் ஆக்சிஜன் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

எச்சரித்த அதிகாரிகள்
அதேபோல், ஐகோர்ட்டில் ஆஜரான தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், நோடல் அதிகாரியுமான உமாநாத், "தமிழகத்தில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் மே.7 வரை மட்டுமே இருக்கும். அதன்பிறகு தமிழகமும் மிக மோசமான சூழ்நிலையை எட்டிவிடும்" என்று தெரிவிக்க பிளாஷ் செய்திகள் மக்களை நடுங்கச் செய்தன. அன்றைய தினம், ஐகோர்ட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "தமிழகத்துக்கு ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்குமுறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

ஒரே நாளில் ரியாக்ஷன்
இந்த இக்கட்டான நிலையில் தான், தேர்தல் தோல்வியின் காரணமாக, முந்தைய அதிமுக அரசு பதவியை விட்டு விலக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. இதையடுத்து, தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உடனடியாக தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, சென்னை ஐகோர்ட் உத்தரவு என்ற காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு ஒரே நாளில் ரியாக்ட் செய்தது தான் இங்கு ஹைலைட்.

மக்கள் எதிர்பார்ப்பு
முதல்வர் ஸ்டாலின் கேட்ட 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும், 419 மெட்ரிக் டன் உற்பத்தியை உடனடியாக ரிலீஸ் செய்திருக்கிறது மோடி அரசு. கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் என பல மாநிலங்கள் ஆக்சிஜன் தேவைக்காக அல்லாடி வரும் சூழலில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை அதிகரித்து கொடுத்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, இதே தமிழகத்திற்கு ஆக்சிஜனை ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் போட்ட மத்திய அரசு, தற்போது ஒரே கோரிக்கையில் ரிலீஸ் செய்திருக்கிறது. எனினும், தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு, துரித நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் எடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications