குடியரசு தினத்தில்... வாள்களை சுழற்றியபடி... வன்முறையை தூண்டச் செய்த முக்கிய குற்றவாளி கைது!
டெல்லி: டெல்லியில் குடியரசு தினம் அன்று டிராக்டர் பேரணியில் மூண்ட வன்முறை தொடர்பாக முக்கிய குற்றவாளி மனீந்தர் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மனீந்தர் சிங் குடியரசு தினத்தில் தான் கைகளில் வைத்திருந்த 2 வாள்களையும் சுழற்றியபடி அரசுக்கும், போலீசாருக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மனீந்தர் சிங்கின் இந்த செயல் பலரையும் வன்முறையில் ஈடுபட தூண்டியது என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
பேரணியால் பதற்றம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. சிலர் கைகளில் வாள்களை சுழற்றியபடியும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீப் சித்து கைது
இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் பலரை கைது செய்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனீந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்களை சுழற்றினார்
கைதான மனீந்தர் சிங்கும், அவரது கூட்டாளிகள் 5 பேரும் குடியரசு தினம் அன்று மோட்டார் சைக்களில் செங்கோட்டைக்கு சென்றனர். அப்போது மனீந்தர் சிங் தான் கைகளில் வைத்திருந்த 2 வாள்களையும் சுழற்றியபடி அரசுக்கும், போலீசாருக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். மனீந்தர் சிங்கின் இந்த செயல் பலரையும் வன்முறையில் ஈடுபட தூண்டியது என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
விவசாய சங்க தலைவர்கள் பேச்சால் உத்வேகம்
டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள சிந்தி காலனியில் வசிக்கும் மனீந்தர் சிங், கார் ஏசி மெக்கானிக் ஆவார். டெல்லியில் உள்ள சிங்கு தினமும் சென்று வந்ததாகவும், அங்கு விவசாய சங்க தலைவர்கள் ஆற்றிய உரைகளால் உத்வேகம் பெற்றதாகவும் விசாரணையில் மனீந்தர் சிங் கூறியுள்ளார். அவரது வீட்டில் இருந்து 2 வாள்கள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.