"வெறுப்பை வேரறுப்போம்".. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.. இலக்கு ஒன்றுதான்.. மோகன் பகவத் பேச்சு
"மதங்கள் என்பது நம்மை ஒழுக்கப்படுத்தி, ஆன்மீகத்திற்குள் கொண்டு செல்லும் ஒரு கருவி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்"
டெல்லி: "நாம் பின்பற்றும் மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.. ஆனால் அடையப்போகும் இலக்கு ஒன்றுதான்" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மேலும், வேறுபாடுகளை மையமாக வைத்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் எனக் கூறிய அவர், நம் மனதில் இருக்கும் வெறுப்புணர்வை வேரறுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனிடையே, மோகன் பகவத்தின் இந்த பேச்சினை கடந்த காலங்களில் அவர் கூறிய சில கருத்துகளோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்துத்துவா சித்தாந்தம்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, தனது சித்தாந்தங்களை நாடு முழுவதும் பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் முழுவீச்சில் இறங்கியது. அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பல பொதுக்கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இந்துத்துவா சித்தாந்தத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். ஆரம்பத்தில், அவரது கருத்துகள் சர்ச்சையையும் உண்டாக்கின.

அணுகுமுறையை மாற்றிய மோகன் பகவத்
குறிப்பாக, படையெடுப்பாளர்களுடன் இந்தியாவுக்கு வந்ததுதான் இஸ்லாம் மதம்.. மற்றபடி இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள்தான் என மோகன் பகவத் ஒருமுறை பேசியது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், சில காலங்களுக்கு பிறகு தனது அணுகுமுறையை மோகன் பகவத் மாற்றிக் கொண்டார். முஸ்லிம் தலைவர்களை சந்திப்பது, அவர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவது என மோகன் பகவத்தின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேலும், முஸ்லிம் மதத்தினரும் நமது சகோதரர்கள்தான் என அண்மைக்காலமாக அவர் அடிக்கடி பேசி வருகிறார். இதற்கு ஒருதரப்பில் வரவேற்பு இருந்தபோதிலும், மோகன் பகவத்தின் இந்த திடீர் மனமாற்றம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் எனவும் சில அரசியல் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வெறுப்புணர்வுகள் வேண்டாம்..
இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்ஆஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த வெறுப்புணர்வுகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறான விஷயம். மதங்கள் என்பது நம்மை ஒழுக்கப்படுத்தி, ஆன்மீகத்திற்குள் கொண்டு செல்லும் ஒரு கருவி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் பல பெயர்களை வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.

வெறுப்பை வேரறுப்போம்
பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. ஆனால், அனைத்து மதங்களுக்குமான இலக்கு ஒன்றுதான். இதைதான் இந்து மதமும் சொல்கிறது. வேறுபாட்டினை மையமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வது அறிவற்ற செயல் ஆகும். மற்ற நாடுகளுக்கு அன்பை போதிக்கும் நாமே இப்படி செய்வது சரியல்ல. நம் மனதில் இருக்கும் வெறுப்பை வேரறுக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய மலையின் மீது பலர் ஏறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் சரியானது எனத் தோன்றும். ஆனால், மலை உச்சியில் இருந்து பார்ப்பவருக்கே அவர்கள் அனைவரும் தன்னை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரியும். அதுபோலதான் மதங்களும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.












Click it and Unblock the Notifications