உயர்ஜாதி ஏழைகளுக்கான வறுமை ஒழிப்புத் திட்டமா இடஒதுக்கீடு? உச்சநீதிமன்றத்தில் வக்கீல்களின் அனல் வாதம்
டெல்லி: சமூகத்திலும் கல்வியிலும் முன்னேறிய வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர் என்பதற்காக அவர்களுக்கான வறுமை ஒழிப்புத் திட்டம் ஒன்றும் இல்லை இடஒதுக்கீடு; சமூக, வரலாற்று ரீதியாக கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டுக்காகத்தான் இடஒதுக்கீடு என்பதே கொண்டுவரப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
முன்னேறிய வகுப்பு அல்லது உயர்ஜாதி அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
உச்சநீதிமன்ற வழக்குகளில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு அளவு 50% என்பதை தாண்டக் கூடாது என வரம்பு உள்ளது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளதால் இந்த வரம்பு பொருந்தவில்லை. ஆனால் 50% இடஒதுக்கீட்டை மீறும் வகையில் முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு உள்ளது. இது ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி விடும். இதனால் முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் முன்பாக நேற்று நடைபெற்றது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் கோபால், சஞ்சய் பாரிக், அரோரா உள்ளிட்டோர் வாதிட்டனர். இவ்வழக்கில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களின் தொகுப்பு:

வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல
சமூக, வரலாற்று ரீதியாக கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்ட, சமூக அநீதி இழைக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டுக்காகத்தான் இடஒதுக்கீடு என்பதே கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீடு என்பது பொருளாதார வரம்புகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படக் கூடியது அல்ல.சமூகத்திலும் கல்வியிலும் முன்னேறிய வகுப்பினருக்கான வறுமை ஒழிப்புத் திட்டம் போல இடஒதுக்கீட்டை செயல்படுத்தவும் முடியாது.
சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை பறிகொடுத்த முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவர், முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறார் என்பதற்காக இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது. முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் ஒருவர் பின்தங்கி இருக்கிறார் எனில் இடஒதுக்கீட்டு பலனை அனுபவிப்பதைவிட விட லாட்டரி சீட்டு வாங்கி ஜெயித்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்துவிடலாம்.

பித்தலாட்டம்- மோசடி- ஏமாற்றுவேலை
அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்தம் கொண்டு வந்தது அரசியல் சாசனத்தில் நிகழ்த்தபட்ட மோசடி அல்லது பித்தலாட்டம் அல்லது ஏமாற்றுவேலை. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குகிற அதிகாரம் தமக்கு இல்லை என்பதை நாடாளுமன்றம் நன்கு அறியும்.

சஹானி வழக்கு தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தவிர வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் கிடையாது என்பதை நாடாளுமன்றம் நன்கு அறியும். ஆனாலும் திட்டமிட்டு, முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பயனடைவதற்காகவே இந்த பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி
ஒருவர் தமக்கு இவ்வளவுதான் வருமானம் என்று கொடுக்கிற பிரமாணத்தின் அடிப்படையில் ஏழை என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? ஒருவரது ஓராண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கு குறைவாக இருக்கிறது என்பதாலே ஒருவரை ஏழை என வரையறை செய்ய முடியாது. முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மாத வருமானம் ரூ66,666 அல்லது ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கு கீழ் இருந்தால் 10% இடஒதுக்கீடு பெற முடியும் என்கிறது இந்த சட்ட திருத்தம். ஆனால் நாட்டில் 93.7% பேரின் ஒரு மாத வருமானம் வெறும் ரூ25,000 மட்டும்தான் என்கிறது எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் ஆய்வறிக்கை. ஆகையால் முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு மட்டுமல்ல இந்த 93.7% பேருக்கும்தானே இடஒதுக்கீடு பொருந்தும்? இந்த நாட்டில் 6% பேர்தான் மாதத்துக்கு ரூ25,000க்கு மேல் வருமானம் பெறுகின்றனர். முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை ஒழிக்கிற ஒரு முயற்சிதான். இந்த முயற்சி கொல்லைப்புறமாக திணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.












Click it and Unblock the Notifications