அசோக் லவசாவிற்கு பதிலாக.. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமனம்
டெல்லி: ராஜினாமா செய்த அசோக் லாவாசாவுக்கு பதிலாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜிவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
ஹரியானா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அசோக் லவசா, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் ஆணையராக பதவியேற்றார்.

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிந்ததும், லவசாதான், தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவசா நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார் அசோக் லவசா. வரும் 31ம் தேதிக்குள், ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதையடுத்து, அசோக் லாவாசாவுக்கு பதிலாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"அரசியலமைப்பின் பிரிவு 324 இன் பிரிவு (2) இன் படி, தேர்தல் ஆணையராக ராஜிவ் குமாரை (ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்) நியமனம் செய்வதில் ஜனாதிபதி மகிழ்ச்சியடைகிறார்." என்று சட்டத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி, லவசா விடைபெற்றதும், அப்பொறுப்பை, ராஜிவ் குமார் ஏற்க உள்ளார் என்று தெரிகிறது.
ராஜிவ் குமார் 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும்.
பி.எஸ்.சி மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்றுள்ள ராஜிவ் குமார் முன்னதாக நிதி செயலாளராக பணியாற்றியுள்ளார். கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் இவராகும்.












Click it and Unblock the Notifications